தொடர் 18
ஹைக்கூ என்பது வாசித்ததும் கடந்து போவதல்ல. வாசகனை கடந்து செல்ல விடாமல் சட்டென நிறுத்தி வசப்படுத்துவதே நல்ல ஹைக்கூ.
அத்தகைய ஒரு ஹைக்கூவானது எக்காலத்திலும் எழுதப்படலாம். நிகழ்காலத்தில் தான் எழுதப்பட வேண்டுமென கட்டாயப்படுத்துவது தவறு.
ஹைக்கூவில் பிரதானமாக கடைபிடிக்க வேண்டியவை என.. ஹைக்கூ வரலாற்று ஆசிரியரும், தொகுப்பாளருமான ஆர்.எச்.பிளித் (R.H.Blyth) ஹைக்கூவிற்கென எட்டு குறிப்புகளைத் தருகிறார்.
- நகைச்சுவை
- சுருக்கம்
- ஜப்பானிய மொழிஇயல்பு
- இரட்டைக்கிளவி
- ஹைக்கூ யாப்பு
- கிரெஜி
- ஹைக்கூ தொடர்
- பருவகாலங்கள்
என எட்டு வகை அம்சம் இருக்க வேண்டுமென்கிறார். இவற்றுள் கூட பல இன்று காலாவதியாகி விட்டது. இன்று இவற்றுள் ஒன்றிரண்டு மட்டுமே இன்னும் ஹைக்கூவில் உலகம் முழுவதும் தொடர்கிறது.
கடந்த அத்தியாயத்தில் இறந்தகாலத்தில் எழுதப்பட்ட ஜப்பானியக் கவிதைகள் பலவற்றை பார்த்தோம். இந்தியக் கவிஞர்களும் இறந்தகாலத்தில் ஹைக்கூவை எழுதி உள்ளனர். இதை கவனியுங்கள்..
கவிதை எழுதுவதை நிறுத்தினேன்
கையில் வந்து அமர்ந்தது
பசித்த கொசு.
- மித்ரா கவி
இலையுதிர் காலம்
உதிர்ந்து விட்டது
மரங்களின் நிழல்.
- அமுதபாரதி
உடைந்த வளையல் துண்டு
குளத்தில் எறிந்தேன்
அடடே..எத்தனை வளையல்கள்.
- அறிவுமதி
அறுவடைக்கு வந்துவிட்டனர்
வயல் மீன்களுக்கு
இன்னும் பாடல்.
- நா.விச்வநாதன்
தொலைதூரப் பயணம்
இருக்கையில் உறைந்து கிடக்கும்
அலைகிற மனசு.
- வதிலை பிரபா
வீசிய கல்
உடைந்து நொறுங்கியது
குளத்தில் நிலா.
- யுவபாரதி கந்தகப்பூக்கள்
தந்தது இசை
துளைகளிட்ட பின்னும்
புல்லாங்குழல்.
- இரா.இரவி
கறுத்தப் பெண்
புகுந்தகம் வந்தாள்
கலர் டி.வி யோடு
- மு.முருகேஷ்
கண்ணாடி கூண்டில் நின்று
கொடி ஏற்றிப் பேசினார் பிரதமர்
சுதந்திர தினவிழா.
- ந.க.துறைவன்
இவையெல்லாம் இறந்தகாலத்தை முன்னிருத்தி எழுதப்பட்டவையே. இன்று நிகழ்காலத்தில் எழுத வேண்டுமென்ற கட்டாயத்தின் பெயரில் நடு அடியில் ஓடுகிறது, பாடுகிறது, ஆடுகிறது, வாழ்கிறது என ஒரே …கிறது மயமாக இருப்பதனால் கவிதையின் அழகு நிறைய குறையவே துவங்கி விட்டது.
ஜென் சிந்தனை நிகழ்காலத்தில் பங்கெடுப்பதே சிறந்தது என்பதால் ஜென் சார்ந்து எழுத நேரிடுகையில் நிகழ்காலத்தில் எழுதுங்கள். இறந்தகாலத்தில் எழுதுவதும் தவறில்லை எனப் புரிந்து கொள்ளுங்கள். நிகழ்காலத்தில் ஹைக்கூவை வடிவமைப்பது சிறப்பானதே. அதற்காக வலிய திணித்தலும் வேண்டாம்.
நமக்கு வேண்டியது சிறப்பான ஹைக்கூ என்பதை மறந்து விட வேண்டாம். அதற்கான சில விசயங்களை ஏற்பதும் நல்லதே.
அடுத்து ஈற்றடி சிறப்பு.
2 Comments
Bommidi Mohandoss · ஆகஸ்ட் 10, 2019 at 20 h 16 min
எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கும் வதிலை பிரபா அவர்களின் ஹைக்கூ இறந்த காலத்தைக் காட்டவில்லையே.
அனுராஜ் · ஆகஸ்ட் 16, 2019 at 13 h 14 min
உறைந்து கிடக்கும் என்பது இறந்தகாலச் சொற்றொடரே.. உறைந்து கொண்டிருக்கிறது.. அல்லது உறைந்து கிடக்கிறது என்பது நிகழ்காலமாக கொள்ளலாம்.. இங்கு அலைகிற மனசு என்பது எப்போதும் அலையும் இயல்புடையதே.. அது காலத்தில் அடங்காது.