பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசேவையாளருமான மாவனல்லை பாரா தாஹீர் உடனான நேர்காணலோடு இவ்விதழில் உங்களை சந்திக்கிறோம். இலக்கியத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி இன்று வரை தொடர்ந்து இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கும் இவர் நூற்றுக்கணக்கான கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற்ற உலக சாதனை விழாவில் 5000 மழலைப் பாடல்களை ஒரே நூலாக வெளியிடும் நிகழ்வில் தனது ஐம்பது பாடல்களையும் இணைத்து பங்களிப்பு செய்தமைக்காக இரட்டை நோபல் பரிசு பெற்றதோடு 'தமிழ்நேசன்', 'கவிச்சுடர்', 'கவித்தென்றல்' ஆகிய பட்டங்கள் மற்றும் விருதுகள் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகளுக்கான சமாதான அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளராக செயற்படும் இவர் அகில இலங்கை ஆற்றல் உள்ள பெண்களின் அமைப்பான ஸ்ரீ லங்கா பெண் கிளப் அமைப்பின் ஊடக இணைப்பாளராக செயலாற்றுவதோடு அகில இலங்கை சமாதான நீதவானாகவும் கடமையாற்றுகின்றார். இவரைப் பற்றிய சிறிய அறிமுகத்தோடு நேர்காணலுக்குள் நேர்கண்டவர் ஆயிஷா சகீலா
- உங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைத் தாருங்கள்.
நான் பாரா தாஹீர். இலங்கை திரு நாட்டின் எழில் கொஞ்சும் மலையகத்தின் பதுளையை பிறப்பிடமாகவும்,மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கிறேன் .எனக்கு இரு சகோதரர்களும் இரு சகோதரிகளும் உள்ளனர்.தற்போதுள்ள மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி ,மகளிர் கல்லூரியாக இருக்கும் போது அதில் ஆரம்ப கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரைக்கும் கற்று தேரி ,மேற்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக கற்றுத் தேர்ந்தேன்.நான் ஒரு சமாதான நீதிவானாகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும், ஊடகவியலாளராகவும், சமூக சேவையாளராகவும் திகழ்கிறேன்.

flip-book

- இலக்கியத்துறைக்குள் பிரவேசிப்பதற்கான உங்கள் தூண்டுகோல் என்ன?
நான் கல்வி கற்ற காலத்தில் எனது தந்தையார் தாஹீர் அவர்கள் எமக்காக தமிழ்,சிங்கள,ஆங்கில பத்திரிகைகளை வாங்கி வாசிப்பை ஊக்கப்படுத்தினார். எனது தாயார் ரம்ஜான் பீ அவர்கள் இலங்கைக்கான மாலைதீவு தூதுவராலயத்தில் எழுதுவிளைஞராக கடமைப்புரியும் போது எழுத்துத்துறையில் ஈடுபட்டுள்ளதோடு,இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாடகமும் நடித்துள்ளார்.அத்தோடுஅவர் ஒரு மேடை பேச்சாளரும் ஆவார்.இவ் இரு நிகழ்வுகளுமே என் இலக்கிய பிரவேசத்துக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கும் என கருதுகிறேன்.

- இலக்கியத்துறையில் நீங்கள் செய்துள்ள பங்களிப்புக்கள் பற்றிக் கூற முடியுமா?
கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம், சம்பவம், என பலதையும் இலங்கையிலிருந்து வெளிவரும் பல பத்திரிகைகளுக்கும், வானொலி நிகழ்ச்சிகளுக்கும், சஞ்சிகைகளுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் எழுதியுள்ளேன். பல இலக்கிய போட்டி நிகழ்ச்சிகளில், சாஹித்திய விழா உட்பட பங்குபற்றி பரிசில்களும், சான்றிதழ்களும் பெற்றுள்ளேன். பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள், சவால்கள், சமூகத்தில் ஏற்படும் அநீதிகளை தட்டிக் கேட்டல், சிறுவர் துஷ்பிரயோகம், பெண் ஆளுமைகள் பற்றியெல்லாம் எழுதியுள்ளேன்.


- ஒரு பெண் ஊடகவியலாளராக சாதித்துக்கொண்டிருக்கும் நீங்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரதான சவால்கள் என்ன?
முஸ்லிம் பெண்கள் ஊடகத் துறைக்கள் ஈடுபடுவது குறைவு. பத்து வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.இத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த ஆரம்ப காலங்களில் பெண் ஊடகவியலாளர் என்ற வகையில் பல சவால்களை சந்தித்துள்ளேன்.குறிப்பாக முஸ்லிம் பெண் ஊடகவியலாளர் என்ற ரீதியில் செய்திகள் சேகரிக்க சென்ற இடங்களில் முஸ்லிம் பெண்களுக்கு தகுதியான தொழில் இதுவல்ல என அலசப்பட்டது.அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு முன் வைத்த காலை பின் வைக்காமல் கணவர் எம்.எப்.எம்.ஒமர் அவர்களின் ஊக்கத்தோடு படிகளை தாண்டி வந்தேன்.அண்மையில் கூட பிரபலமான ஒரு பத்திரிகையில் தொடராக பிரசுரமான எனது செய்திகளை கண்டு பொறாமை பட்ட ஒரு ஊடகவியலாளரே எனது செய்திகள் பிரசுரமாவதை தடுத்து நிறுத்த அந்த பத்திரிகை நிருவனத்தோடு தொடர்பை ஏற்படுத்தி தடுத்து நிறுத்த எத்தனித்ததை அறிய முடிந்தது.ஆனாலும் எதையும் உள்வாங்கி சளைக்காமல் என்னால் முடிந்தளவு சமூகத்துக்காக ஊடகத்துறை மூலம் பணியாற்றுகிறேன்.
- உங்களது இலக்கியத்துறைக்கு உங்கள் குடும்பத்தவர்களின் மற்றும் கணவரின் ஒத்துழைப்பு எவ்வாறானது?
என் இலக்கிய துறைக்கு என் பெற்றோர் தொண்று தொட்டு உதவிக்கரம் தந்தார்கள்.எழுதுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதோடு எங்கு இலக்கிய நிகழ்வுகள் நடந்தாலும் என்னை அழைத்துச் சென்று ஊக்குவித்தனர்.காலப் போக்கில் இலக்கிய வாசமே இல்லாமல் இருந்த கணவர் என்னோடு பயணித்து எனது முதல் ரசிகராக இருந்ததை மறக்க முடியாது.
- உங்களது எழுத்துத்துறையின் பிரதான கருப்பொருள் எவ்வாறானதாக இருக்கும்?
பிரதான கருப்பொருளை சமூகத்தில் இருந்தே இனம் கண்டு எடுப்பேன்.பொதுவாக பெண்கள்,சிறுவர்கள்,முதியோர் பிரச்சனைகள் ,நாட்டு நடப்பு ,நாட்டு அநீதிகள்,போதைப் பொருள் என பலதையும் அடயாளப்படுத்தலாம்.
- தற்காலத்தில் எழுத்துத்துறையும் எழுதுவதற்கான களமும் விரிவடைந்துள்ளது. சமூக ஊடகங்கள் நிறைய எழுத்தாளர்களை அறிமுகம் செய்கின்றது. இது பற்றிய உங்கள் கண்ணோட்டம் யாது?
உண்மையில் களம் விரிவடைந்துள்ளது.முன்பு பத்திரிகைகளையும் சிறு சஞ்சிகைகளையும் மட்டுமே அநேகமாக நம்பி இருக்க வேண்டியிருந்தது. அதனால் தரமான எழுத்துகளுக்கே இடம் கிடைத்தது. அதற்கு மாற்றமாக இப்போது அச்சு ஊடகங்களை விட இணையத்தளங்களில் பலர் எழுதி வருகின்றது மட்டுமல்லாமல் எழுதிய குறுகிய காலத்துக்குள் நூல்கள் வெளியிட முனைவது வியப்பாகவுள்ளது. இவர்கள் காண்பதை கற்று நிறைய எழுத வேண்டும். அனுபவம் பெற வேண்டும்.





- மனித உரிமைகளுக்கான சமாதான அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளராக இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் பற்றிக் கூற முடியுமா?
மனித உரிமைகளுக்கான சமாதான அமைப்பின் நிர்வாக அங்கத்தவராக இருப்பதோடு வறுமை ஒழிப்பு, சிறுவர் மற்றும் முதியோர் போசாக்கிண்மை சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்தல் திடீர் அனர்த்தம் நிகழும் போது சமூக தொண்டு புரிதல் போன்றவற்றில் ஈடுபடல்.
- இலக்கியத்துறையில் பெண்கள் முன்னேறுவதற்குக் குடும்பம் தடையாக இருக்கிறது என்று கருதி தமது திறமைகளை முடக்கி வாழும் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனைகள் என்ன?
இலக்கியத் துறையில் பெண்கள் முன்னேறுவதற்கு குடும்பம் தடையாக இருக்கும் அளவுக்கு நாம் நடந்துக் கொள்ளக் கூடாது என்பதையே நான் முன் வைக்க விரும்புகிறேன்.எதற்கும் திட்டமிடல் அவசியம். எமக்குள் ஒரு கட்டமைப்பை வைத்து திட்டமிட்டு குடும்ப புரிந்துணர்வை அனுசரித்து செயல்பட்டால் வெற்றி உண்டு. அடுப்பூதும் பெண்கள் நிலமை மலையேறி விட்டதென்றே சொல்லலாம்

- எமது தமிழ்நெஞ்சம் இதழ் பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?
தமிழ்நெஞ்சம் இதழ் அறிமுகம் குறுகிய காலத்துக்குள்ளே கிடைத்தது.அது பல்சுவை சஞ்சிகை என்றே சொல்லலாம்.பல எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது எனலாம். ஆளுமைகளை அறிமுகம் செய்துக் கொண்டிருப்பது வரவேற்கக் கூடியது. மொத்தத்தில் சிறந்த ஒரு சஞ்சிகை. வளர்க அதன் பணி.