தொடர் – 45
ஹைக்கூ எளிய கவிதை வடிவம்… ஆனால் உள்ளார்ந்த பல விசயங்களைக் கொண்டிருக்கும் உன்னத கவிதை வடிவமாகும்.
இக் கவிதை வடிவில் கருப்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பது பல விசயங்கள்.. இடம், பொருள், சூழல், காலநிலை இவையனைத்தும் இணைந்தே பயணிக்கும். இதில் கருப்பொருளோடு முரண்பட்ட விசயங்களைத் திணித்தால் கவிதையின் தன்மை மாறுபட்டு விடும்.
கோடைக்காலத்தைக் குறித்த ஹைக்கூ எழுதினால்…கோடைகாலத்தோடு இணைந்த விசயங்கள் மட்டுமே அங்கு இடம் பெற வேண்டும். குளிர்கால சம்பவங்களை அதில் இணைப்பது முரணாக அமைந்து ஹைக்கூவின் அழகை சிதைத்து விடும்.
ஹைக்கூ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பருவ காலங்களை கவிதையில் விதைத்தே நகரும். இயற்கைச் சார்ந்து எழுதப்படும் அத்தனைக் கவிதைகளிலும் இதனை நாம் உணரலாம்.
இதை கவனியுங்கள்..
கோடைகாலம்
தேடி அலைகிறது கால்நடை
பச்சைப் புல்வெளி.
இது சமீபத்தில் நான் கண்ட ஒரு கவிஞரின் கவிதை. இதை மேலோட்டமாக காணும் போது சரியெனப் படுவதைப் போல தோன்றினாலும், இது சரியான கவிதையென கொள்ளப்படாது.
காரணம்.. கோடைகாலத்தில் பச்சைப் புல்வெளிகளை காண்பது அரிது. ஆனால் அதுவே மழைக்காலம் அல்லது பனிக்காலமாக இருந்தால் இதை சரியெனக் கொள்ளலாம். ஆக கவிதையில் ஒரு பருவ காலத்தை குறிப்பிட்டு எழுதினால் அப்பருவத்தில் கிடைக்கக் கூடிய, விளையக் கூடிய, காணக்கூடிய.. பொருளையோ,தானிய வகைகளையோ, பறவை,விலங்கு வகைகளையோ மட்டுமே குறித்தல் அக்கவிதையின் உண்மைத் தன்மைக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
நாவல் பழத்தை கவிதையில் கையாண்டால் ஆடி, ஆவணி மாதமாக இருந்தால் நல்லது.
மாம்பழத்தை கவிதையில் கோடைகாலத்தில் கையாளலாம்.
வலசை வரும் பறவைகளும் குறிப்பிட்ட காலந்தான் காணக் கிடைக்கும். அது போலவே இது. அறுவடை எனில் மார்கழி, தை என இருப்பது நல்லது..
காலங்களுக்கு உகந்த கருப்பொருளை கவிதையில் கச்சிதமாய் பொருத்துபவனே சிறந்த ஹைக்கூ கவிஞன். இவ்விசயங்களை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கையாள்பவர்கள் ஜப்பானியர்கள்.
சக்குரா மலர்களை கையாண்டால் அது வசந்தகாலத்தை குறிக்கும்..
மூதாதையர் திருவிழா எனில் அது கோடை காலத்தை குறிக்கும். இது போன்ற பருவ காலத்தை குறிக்கும் சொல்லினை ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் கிகா என்கிறார்கள். இது போன்ற பருவகால தொடர்பு இல்லாத கவிதைகள் பெரும்பாலும் ஜப்பானிய ஹைக்கூவில் இல்லை எனலாம்.
இதை கவனியுங்கள்..
சனவரி
எல்லா மாநிலங்களிலும்
பிளம் மரங்கள் பூக்கும்.
- இஸ்ஸா
சனவரிக்கு பதில் மே என இருந்தால் இது கவிதைக்கு பொருந்துமா? ஏனெனில் பிளம் மரங்கள் பூப்பது சனவரியில். அதை நாம் மே மாதம் என முரணாய் குறித்தால், அது கவிதையின் உண்மைத் தன்மைக்கு புறம்பாய் அமையும். அது போல காலத்திற்கும்..கவிதைக்கும் உரிய கருப்பொருளை தேடி இணைப்பதே நல்லது. அப்போதுதான் சிறப்பான ஹைக்கூவாக அது வடிவெடுக்கும்.
ஆகவே.. நீங்களும் கவிதைகளின் வாயிலாக காலத்தை உணர்த்த முயற்சியுங்கள். அதையும் சரியாக உணர்த்த முயற்சியுங்கள். அப்போது தான் ஹைக்கூ சிறக்கும்.