அசைபிரித்தல்
ஹைக்கூ ஜப்பானில் பிறந்த ஒரு கவிதை வடிவம் என்பதையும், அதனை அங்கு மரபு மீறாமல் எழுதுகிறார்கள் எனவும், ஜப்பானிய ஒவ்வொரு எழுத்தும் ஒரு அசையெனக் கொள்ளப் படுகிறது என்றும்.. 5 – 7 – 5 என்ற அசையமைப்பில் ஜப்பானிய ஹைக்கூ எழுதப் படுகிறது என்பதையும் இதற்கு முன் கண்டுள்ளோம். தமிழில் ஹைக்கூவிற்கு அசைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு விட்டது. அசை எண்ணிக்கை வைத்து ஹைக்கூ படைக்க அவசியமில்லை.
இருப்பினும்… அசை கட்டுப்பாடோடு ஒரு ஹைக்கூவை எவ்வாறு வடிவமைப்பது என்பதையும் தெரிந்து கொள்வதில் தவறில்லை. அதைப்பற்றி இங்கு காண்போம்.
துவக்கத்தில், பலரும் ஜப்பானிய எழுத்துமுறை போல, ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு அசையாக பிரித்து தமிழில் ஹைக்கூவை கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது தவறு.
தமிழ் கவிதை மரபில் உள்ளதைப் போல நேரசை..நிரையசை கணக்கில் தான் பிரித்தல் வேண்டும்.
குறில் தனித்தும், குறிலுடன் ஒற்றும்
நெடில் தனித்தும், நெடிலுடன் ஒற்றும்
வருவது நேரசை
எ.கா….
க. (குறில்)
கல் (குறில் + ஒற்று)
கா. (நெடில்)
கால் (நெடில் + ஒற்று)
இரு குறில் இணைந்தும், அதனுடன் ஒற்று இணைந்தும் அல்லது குறிலுடன் தொடர்ந்து நெடில் வந்தும் அதனுடன் இணைந்து ஒற்று வந்தாலும் அது நிரையசை.
எ.கா….
வர (இரு குறில்)
வரம் (இரு குறில் + ஒற்று)
படா (குறில் + நெடில்)
படார் (குறில் + நெடில் + ஒற்று)
நீங்கள் கவனிக்க வேண்டியவை
- குறில் முதலில் வரும் போது அதனை தனித்து குறித்து அலகிட கூடாது. அடுத்துள்ள ஒற்றுடன் அல்லது நெடிலுடன் இணைத்து அலகிட வேண்டும்.
- குறில் தனித்து வருவது ஒரு சொல்லின் றுதியிலும்..இடையிலும் மட்டுமே நிகழும்.
- ஒற்றெழுத்தை தனித்து அலகிட கூடாது. குறிலுடனோ.. நெடிலுடனோ இணைத்து அலகிட வேண்டும்.. இரு ஒற்று எழுத்து வந்தாலும் முன்னுள்ள குறிலிடனோ, நெடிலுடனோ இணைத்தே அலகிடுதல் வேண்டும்.
- இரு நெடில்களை ஒன்றாக அலகிட இயலாது. தனித்தனியே நேர்..நேர் என அலகிடுதல் வேண்டும்.
இப்போது இந்த ஹைக்கூவை கவனியுங்கள்..
காற்/றே/ திசை/ திரும்/பு/… 5
நேர்/நேர்/ நிரை/ நிரை/நேர்
இங்/கே/ ஒடிந்/துவி/ழும்/நிலை/யில்/… 7
நேர்/நேர்/ நிரை/நிரை/நேர்/நிரை/நேர்.
பட/ரும்/ கொடி/யொன்/று… 5
நிரை/நேர்/ நிரை/நேர்/நேர்.
இவ்வாறாக தான் அலகிட வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்ளவே இது. அசைக் கட்டுப்பாடு இன்று ஹைக்கூவில் மேற்கொள்ளப் படுவதில்லை என்பதனால், இது உங்களின் தெளிவிற்காக மட்டுமே.