மின்மினிப் பூச்சிகள் மின்னலடிக்க பொன்னொளி பூத்தது மனவானில்
இலக்கிய முதுசம் சிரேஷ்ட எழுத்தாளர், கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் எழுத்துலகில் மிகுந்த முக்கியத்துவத்துடன் நோக்கப்படுபவர். இவரது கலை இலக்கியச் செயற்பாடுகள் காத்திரமானவை. எல்லா நேரமும் உற்சாகம் குன்றாமல் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை கொண்ட இவர், பல்துறை எழுத்துக்களால் பாராட்டும் பல்வேறு விருதுகளும் பெற்றவர். இவரது இலக்கியப் பணியின் (1974 – 2024) ஐம்பதாவது வருட பூர்த்தியினையொட்டி பொன் விழா நிகழ்வு 2024.08.18 இல் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் கொண்டாடப்பட்டது. இது ஒரு சரித்திர நிகழ்வாக அமைந்தது. எழுத்துத் துறையில் இன்னமும் கவனக் குவிப்புடன் செயற்பட்டு வரும் இவருடனான நேர்காணலைத் தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இலக்கியத் துறையில் பொன் விழாக் கண்ட இலக்கிய முதுசம் பீ.ரீ. அஸீஸ் அவர்களுடனான விசேட நேர்காணல்
நேர்கண்டவர் :-
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
மார்ச் – 2026 / 128 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
உங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?
பிச்சைத் தம்பி அஸீஸ் எனும் இயற் பெயரைக் கொண்ட நான், 1974 இல் கிண்ணியாச் செல்வன் எனும் புனைப் பெயரில் எழுதத் தொடங்கி 2024 இல் பொன் விழா கொண்டாடும் பேற்றினை அடைந்தேன். இப்பேறானது எனது வாழ்க்கைப் பாதையில் பொன் எழுத்துக்களால் அடையாளமிடப்பட்ட நிகழ்வாகும். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான போக்கின் அறுவடையாக இன்று நான் காணுகின்ற இலக்கிய இலக்கானது என்றைக்குமே உதாரணமானதொன்றாக நின்று நிலைத்திருக்கும் என்பது உறுதியானதும் திடமானதுமான நம்பிக்கையாகும்.
பல்வேறு நூல் வெளியீடுகள், வெற்றிகள் முகங்கொடுத்த சவால்கள், சுறுசுறுப்பும் உற்சாகமும் நிறைந்த செயற்பாடு, தோல்வியைக் கண்டு துவளாத மனப்பக்குவம் என்பன என்னை ஓர் உயர் நிலைக்கு கொண்டு வந்ததெனலாம். இதனையே எனது அறிமுகமாக எடுத்துக் கொள்ளுங்களேன்.
உங்களது இலக்கியத் தடத்திற்கு வழி வகுத்தவர்களைப் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது இலக்கியப் பயணத்துக்கு வழி வகுத்தவர்களாக பலபேரை அடையாளப்படுத்த முடியும். இவர்களது ஆதரவும், ஒத்துழைப்பும் நிறையவே கிடைக்கப் பெற்றதால்தான் பொன்னொளி மலர் வெளியீடும், பொன்விழாவும் காத்திரமாகக் கொண்டாடப்பட்டது. அத்தகையவர்களைக் கட்டாயம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எனது தாயார் ஹாஜரா உம்மா, தகப்பனார்பிச்சைத் தம்பி, பாட்டனார் அலியான் பணிக்கர் மற்றும் எனது வாழ்க்கைத் துணைவி மர்ஹுமா சித்தி கம்சுனா மேலும் எனது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் போன்றோரையும் குறிப்பிட முடியும். இவற்றோடு எனது எழுத்துலகப் பயணிப்பில் 2011 அம் ஆண்டு முதல் இற்றைவரை கைகோர்த்து நிற்கும் எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா மற்றும் மர்ஹுமா எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, அமரர் நந்தினி சேவியர் முதலானவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
மேலும் எனது ஆரம்ப கால எழுத்துலக வழிகாட்டிகளாக கவிஞர் அண்ணல், ஈழமேகம் பக்கீர் தம்பி, திமிலைத்துமிலன், திமிலைக் கண்ணன் போன்றோரும் டாக்டர்ப்ஹில்மி மஹ்ரூப் போன்றோரும் குறிப்பிடக்கூடியவர்கள். அத்துடன் முன்னோடிகள் கலை இலக்கிய வட்ட அங்கத்தவர்கள், அதன் செயலாளர் ஏ.எம். கஸ்புள்ளா மற்றும் நண்பர்கள், நல்லெண்ணம் கொண்டவர்கள் எனப் பலர் இருக்கின்றனர். மேலும் மிக முக்கியமாக இலங்கையின் தேசிய பத்திரிகைகள், பத்திரிகையாசிரியர்கள், துணையாசிரியர்கள், வலைத்தளங்கள், வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள் என்பனவும் நன்றிகளோடு நினைவு கூறத்தக்கது.
இலக்கிய வாழ்வில் கடந்து வந்த உங்களது பொன் விழா நிகழ்வு பற்றிக் குறிப்பிடுங்கள்?
கடந்த 2024.08.18 ஆம் திகதி நடைபெற்ற எனது பொன் விழா நிகழ்வு பற்றிய சில முக்கிய விடயங்களை ஞாபகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். இந்நிகழ்வு பல முக்கிய செய்திகளை எனது வாழ்வில் படிப்பினையாக்கி நின்றது.
  1. இலக்கிய வாழ்வில் 50 வருடங்கள்
  1. இலக்கிய போட்டி நிகழ்களில் 50 முதலிடங்கள்
  1. ஐம்பது நூல்களின் திறன் நோக்கு (கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அச்சிட்டு தரப்பட்டமை)
  1. பொன்னொளி மலரின் 50 பிரமுகரின் கருத்துரைகள்
  1. எனது திருமண வாழ்வும், 50 வருடங்களை மெல்லக் கடந்த நிலை
  1. எனது மூத்த மகனின் 50 ஆம் ஆண்டு பிறந்தநாள்
  1. பொன் விழா நிகழ்வு காலத்தில் நீண்ட கால இடைவெளியின் பின் இளைய மகனுக்கு ஓர் மகள் பிறப்பு
இவ்வாறான பல முக்கிய நிகழ்வுகள் பொன் விழாக் காலத்தில் நடந்தேறி இருப்பது ஆச்சரியமாக நோக்கத்தக்க தாகும். இதனால் பொன் விழா நிகழ்வும், “பொன்னொளி” பொன்விழா மலர் வெளியீடும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுத்திகழ்கிறது.
உங்களுடைய பொன் விழா நிகழ்வில் வெளியீடு செய்யப்பட்ட “பொன்னொளி” மலர் பற்றிக் குறிப்பிடலாமே?
எனது பொன் விழா நிகழ்வின் ஞாபகார்த்தமாக “பொன்னொளி” மலர் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது. இம்மலரில் 50 முக்கியத்தர்களின் கருத்துரைகள் உள்ளடக்கம் பெற்றிருப்பது விஷேட சிறப்பம்சமாகும். மேலும் எழுத்தாளர்களின் கருத்துரைகள், ஆய்வு கள், கவிதைகள், கட்டுரைகள், வாழ்த் துரைகள், பார்வைச் சுருக்கம், அறிமுகம், நினைவுகளும் நிகழ்வுகளும் போன்ற பல தகவல்களும் மலரில் இடம்பெற்றுள்ளன. அத்தோடு இந்த நிகழ்வில் 50 இலக்கியவாதிகளுக்கு பொன்னொளி விருதும் வழங்கி கௌரவிப்புச் செய்யப்பட்டது. விஷேடமாக முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தினரால் எனது இலக்கியப் பணிக்கான கௌரவமாக பொன்னொளி சாதனையாளர் விருது உரித்தாக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உணர்வூட்டும் கிராமியச் சுவைகள் நிறைந்த உங்களது கட்டுரைகள் பற்றி  விஷேடமாக என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?
எழுத்துரு கிராமிய சுவை நிறைந்த கவிகள் எவர் மனதையும் இலகுவில் கவர்ந்திழுக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது. அவை விரைவாக சமூகத்தை சென்றடைந்து கிராமிய படைப்புகளின்பால் தன் கவனத்தை திருப்புகின்றன. உதராணமாக அவ்வாறான கட்டுரைப் புத்தகத்தில் உள்ள சில கவிகள இதோ:-
  • நாத்துக்கு வெச்ச வெத
               நடுவால வெடிச்சிருக்கு
               சோத்துக்கு ஆகுமெண்டால்
               செறிமானம் ஆகாதாம்
  • செம்பருத்தி பூ மேல
               சித்தெறும்பு ஓடினது
               குத்தமெண்டு காட்டினா
               மெத்தவுந்தான்
               கவல வரும்
               மௌத்து வர அந்த
               நெனவு வரும்
  • மதமதத்த
               தோட்டப்புள்ள
               மாடுவந்து மேயுது
               மச்சான் வர நாளானால்
               கட்டாந் தரையும்
               மிஞ்சுமோ?
நீங்கள் இதுவரை எழுதிய இலக்கியப் படைப்புகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
இலக்கியத்தைப் பொறுத்தவரை அதன் பல்வேறு பிரிவுகளிலும் தடம்பதித்து அதில் வெற்றியும் கண்டவன் என்ற அடிப்படையில் கவிதை, கட்டுரை, சிறுவர் படைப்புகள், கிராமிய கவிகள், ஆய்வுக் கட்டுரைகள், நூல் திறன் நோக்கு, சிறுகதை போன்ற பல்வேறு அம்சங்களில் 20க்கும் மேற்பட்ட எனது எழுத்துலகப் படைப்புகள் வெளிவந்துள்ளது.
சிறுவர் இலக்கியத்துக்கு கனிசமான பங்களிப்பை செய்திருக்கும் நீங்கள் இத் துறையில்  புதிதாக  ஈடுபடுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
சிறுவர் இலக்கியத்துக்கு கனிசமான பங்களிப்பை செய்துள்ள எனக்கு அத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு சொல்லக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் யாரும் யாருக்கும் அறிவுரை, ஆலோசனை வழங்கும் தேவைப்பாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்க வேண்டும். எழுதுபவர்கள் எழுதட்டும். இலக்கிய வரையறைக்குள் சிறந்த நூலாக எழுதட்டும். வெற்றியும் சிறப்பும் அவர்களைத் தேடிவரும்.
வளர்ந்தோர் இலக்கியத்தைவிட சிறுவர் இலக்கியம் படைப்பது சிரமமானது என்கிறார்களே இதுபற்றி?
வளர்ந்தோர் இலக்கியம், சிறுவர் இலக்கியம் இரண்டும் எழுதுபவரைப் பொறுத்துள்ளது. சிலருக்கு இரண்டும் ஓர் இலகு கலையாகும். விடயப்பரப்புகளைப் புரிந்துகொள்வதிலேயே அதன் வெற்றி தோல்வி தங்கியுள்ளது.
கல்வி அமைச்சின் நூலக அபிவிருத்தி சபையின் அனுசரணையோடு வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
கல்வி அமைச்சின் நூலுக அபிவிருத்தி சபையின் அனுசரணையோடு எனது நூல்கள் சில வெளிவந்துள்ளன. நூற்பிரதிகளைப் பரிசீலனை செய்து, அச்சீட்டுக்கு தகுதியாயின் நூலுருவாக்கம் செய்து தருவார்கள். இவ்வாறான நூல்களில் சின்னப் பாப்பா, தாலாட்டுப் பாடல்கள், செவ்வானச் சித்திரம், மஞ்சள் குருவி போன்றனவும் நூலகங்களுக்குப் பொருத்தமான நூல் என்ற தகுதிச் சான்றிதழினைப் பெற்றுள்ளது. கிராமிய சுகந்தம், முதுமையில் விளைந்த புதுமைகள், நினைவொன்றே போதும் போன்ற இன்னும் சில நூல்களும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நீங்கள் எழுதிய நாட்டார் கிராமிய படைப்புகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
நான் எழுதிய கிராமிய இலக்கிய நூல்களாக “நாட்டார் கிராமியப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், சுட்டபழமே சுமையமுதே, மனசெல்லாம் மகிழ்கிறது, ஆரவுட்டுத் தேடுவதோ, கிராமிய சுகந்தம் (எழுத்துரு கிராமிய கவிகள் பற்றியது)” போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதில் கிராமிய சுகந்தம் மிக முக்கியமான நூலாகும். எழுத்துரு கவிகளின் ஆய்வாக இது அமைந்துள்ளது.
பழந்தமிழ் இலக்கியங்களில் உங்களது இரசனை எந்தளவில் உள்ளது?
பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ள ஈடுபாடு பரந்துபட்டது. பழங்கால இலக்கியங்கள் போதிக்கின்ற விடயதானங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்ததில் அவைகள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அது அத்துறையில் உள்ள ஈடுபாட்டினை மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தது.
மேலும் ஓதலம் தையலார் எழுதிய ஐந்திணை நூல்களில் ஒன்றான “பாலைநிலம்” நூல் ஜே.எஸ்.எஸ்.கே. மௌலானா அவர்களால் உரைநடையாக எழுதப்பட்டிருந்தது. மேலும் அறிஞர் சித்திலெப்பை அவர்கள் அசன்பே சரித்திரம் பற்றி ஆ.வா.மு. முஹ்சீன் (அசன்பேயுடைய கதை ஓர் மீள்வாசிப்பு) ஆகிய நூல்கள் இரண்டுக்கும் நான் எழுதிய திறன்நோக்கு தேசிய பத்திரிகைகள், வலைத்தளங்கள், வானொலி என்பவற்றில் களம்கண்டு பெயர் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
உங்களது படைப்புகளால் இலக்கிய உலகில் ஏற்பட்ட சிறப்பான மாற்றங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது படைப்புகள் வெற்றி அல்லது பிரசித்தம் பெறும் நூல்களாக அமையும் போது பலரும் தங்களது கவனத்தை அதன் பக்கமாக திருப்பியதை அவதானிக்க முடிந்தது. மேலும் சமூக பண்பாட்டியல்புகளில் மனித நேயத்தில் உயர்ந்த கொள்கைகளில் உன்னதமான நூல்களாக இவை பெயர் பெறத் தொடங்கின. அதனால் எழுத்துலகில் நிலைத்திருக்கும் தன்மையை அவை பெற்று விளங்கத் தொடங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இதுவரை எழுதிய நூல் மதிப்பீடுகள் பற்றிக் குறிப்பிடலாமே?
நூல் மதிப்பீடு என்ற வகையில் 2020 ஆம் ஆண்டு முதல் நூல் திறன் நோக்கினை எழுதத் தொடங்கியதில் இற்றைவரை 98 திறன் நோக்குகள் நிறைவடைந்துள்ளன. நாட்டில் பல்வேறு பகுதிகளிலுமுள்ள இலக்கியப் படைப்பாளிகளின் நூல்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, பத்திரிகைகள், வலைத்தளங்கள், வானொலி என்பவற்றில் களப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 50 திறன் நோக்குகளை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் “முதுமையில் விளைந்த புதுமைகள்” என்ற பெயரில் 2023 இல் நூலுருவாக்கம் செய்து தந்துள்ளமையானது சந்தோச மளிக்கக்கூடியதொரு செய்தியாகும்.
உங்களது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களும் சம்பவங்களும் ஏராளம். ஏன்? உங்களைப் போன்ற நல்ல இலக்கிய நண்பர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதும் மறக்க முடியாத நிகழ்வொன்றாகக் குறிப்பிடலாம்தானே!
இதுவரை நீங்கள் சிறுகதை தொகுதி யொன்றை ஏன் வெளியிடவில்லை?
ஒரு படைப்பாளியின் வாழ்வில் சிறுகதை வெளியீடென்பது முக்கியமான தொரு நிகழ்வாகும். என்னிடம் தகுதியான சிறுகதைகள் பல கைவசம் இருக்கிறது. கூடிய விரைவில் அது நூலாக்கம் பெறும் என்பது எனது நம்பிக்கை. அவை நிறைவேறும்போது நீண்ட கால இலக்கியக் கனவொன்று முழுமைபெற்ற திருப்தி கிட்டும். இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.
முச்சங்க இலக்கிய வகைகள் தற்போது வாசிக்கப்படுகிறதா?
ஆம், அது தொடர்பான ஆர்வம் உள்ளவர்களால் வாசிக்கப்படுகிறது. தேவையானவர்கள் தேடித் தேடி வாசிப்பதை அவதானிக்கலாம். முச்சங்க இலக்கியங்கள் இன்னும் தலைநிமிர்ந்து நிற்கிறதென்றால் அதன் உயர்வும் தரமும் உச்ச நிலையில் உள்ளதால்தானே!
சிறுவயது முதல் உங்களுக்கு இருந்த வாசிப்புப் பழக்கமே உங்களை ஒரு எழுத்தாளராக மாற்றியது என்று சொல்ல லாமா?
ஆம், நிச்சயமாக. வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும் என்பது உண்மையானது. என்னிடத்தில் வாசிப்பு மட்டும் இல்லையென்றால் ஊர்உலகம் அறியாத ஒரு சாதாரண குடிமகனாகவே இருந்திருப்பேன். வாசிப்பின் மூலமே எனது வாழ்வின் வெற்றியும் உயர்வும் சாத்தியமானது.
அண்மைக் காலங்களில் வழங்கப்படும் விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
அண்மைக் காலங்களில் வழங்கப்படும் கலை இலக்கிய விருதுகள் காத்திரமானவையாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. படைப்பாளிகள் வாழும்போது வாழ்த்தப்படக்கூடியவர்கள் என்பதை பல விருதுகள் உறுதி செய்கின்றன. ஆனால் விருதுகள் தகுதியானவர்களுக்குக் கிடைக்கப் பெறுவதில் கவனம் செலுத்தப் படுவது முக்கியமானதாகும். 
நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கலையும் இலக்கியமும் காதலைப் போன்று இனிமையானது, சுகமானது, மனதுக்கு இதமளிப்பது, மக்களை மதிக்கத் துண்டுவது. வாழ்வியலை நேர்கோணத்தில் செலுத்தி அன்பையும் மதிப்பையும் உலகுக்களிப்பது. சிறந்த பண்பாட்டியல்புகள் தோற்றம் பெறவும் வரலாற்றுப் பாரம்பரியங்களை அறிந்து கொள்ளவும் இவை துணை நிற்கின்றன. சிறந்த மனித நேயமிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் இவற்றின் பங்கு அளப்பரியது. கலை இலக்கியத்தை நேசிப்போம்! மனித வாழ்வியலைப் போசிப்போம்!