தொடர் 22.
ஹைக்கூவில் மகளிரின் பங்கு
உலக இலக்கியங்கள் அனைத்திலும் மகளிருக்கான பங்களிப்பும் கணிசமாக இருந்தே வந்திருக்கிறது. பொதுவில் மகளிரைப் போலவே அவர்களின் பாடுபொருளும் மென்மையாக இருந்தது.
ஒரு காலக்கட்டத்தில்… காதல், பிரிவு, சோகம்..குடும்பம் என அவர்களுக்கான சூழல் அழகாய் கவிதைகளில் வெளியானது. பின்னர் அதுவே நாளடைவில் சற்றே விரிந்து சமுதாயச் சிந்தனைகளாயும், சாடல்களாயும் பரிணமிக்கத் துவங்கியது.
ஹைக்கூவிலும் மிகப் பெரிய பங்களிப்பினை மகளிர் 1990 இல் இருந்து தமிழகத்தில் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்றும் பத்திரிக்கைகளில், மின் இதழ்களில், முகநூலில் என ஹைக்கூ பெண் கவிஞர்கள் ஆண்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என சரிநிகராய் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது வரவேற்கக் கூடிய ஒன்றாகும். ஏனெனில் இவர்களது சிந்தனையும், கருப்பொருளும் முற்றிலும் மாறுபட்டிருப்பதும் பலரது படைப்பினை படிக்கும் போது உணர முடிகிறது. வெறும் எழுத்தளவில் நின்று விடாமல் இவர்கள் தங்களது படைப்புகளை நூலாக்கம் செய்வதும் மிக அவசியமான ஒன்றாகும். இங்கு அனைவரது பெயரையும் குறிப்பிட எனக்கு ஆசையிருப்பினும், ஒன்றிரண்டு விட்டுப்போய்விடவும் வாய்ப்புள்ளது. எனவே ஒரு சிலரது ஹைக்கூவை மட்டும் காட்சிப் படுத்துகிறேன்.
குளத்தில் விழுந்த கல்
கரைக்குத் தாவுகிறது
தவளை.
- சங்கீதா பிரபு (பிச்சிப் பூ)
தீனி போடுகிறார்
ஓடி வந்தமர்கிறது
கையில் ஒரு பறவை.
- பிரிதிவிராஜ் லோஜி
செலவிற்குப் பணம்
தேடித் தொலைந்து போகிறது
வாழ்க்கை.
- அன்புச்செல்வி சுப்புராஜ்
இசைக்கருவி ஏதுமின்றி
அழகிய இசை
வண்டின் ரீங்காரம்.
- ஜெயசுதா
பனிமூட்டம்
மெல்ல கலைகிறது
வானத்து ஓவியம்.
- ஹிசாலி
வந்துவிட்டுப் போன
காலடித் தடங்களாய்
ஆழிப் பேரலை.
- மிஸ்ருல் ஸரினா
யார் கொடுத்த சாபம்
நீரில் நிற்கிறது
தாமரை.
- கவிநுட்பம்
நிற்கும் சிலை
நடந்த வண்ணம் இருக்கிறது
பூசை.
- மதி இஷா
வேலி போட்டும்
தாண்டிச் செல்கிறது
வளர்ந்த கிளை.
- ஷர்ஜிலா யாகூப்
ஐயனார் சிலை
அச்சமின்றி அமரந்திருக்கிறது
தலையில் குருவி.
- ஸாமன் லாபிர்
நடப்படும் மரக்கன்று
மெல்லத் துளிர் விடுகின்றது
மனதில் நம்பிக்கை.
- ராஜிலா ரிஜ்வான்
பெருகும் குப்பை
நாசியைத் துளைத்துச் செல்கிறது
குடிசை சமையல்.
- மகேஸ்வரி கண்ணன்
கூண்டில் கிளி
சுற்றிசுற்றி வருகிறது
கீழே பூனை.
- ரீனா ஜெயா
கடலோரக் காற்று
சுமந்து வருகிறது
கருவாடு வாசம்.
- கீர்த்தி கிரிஷ்
அடுக்குமாடி கட்டிடம்
அழகாக இருக்கின்றது
அழகுத் தாவரங்கள்.
- நிர்மலா சிவராசசிங்கம்
வெட்டப் படும் மரங்கள்
காணாமல் போகின்றன
மழைவளம்.
- சிவதர்ஷினி ராகவன்
கொட்டும் மழை
அதிகரித்துக் கொண்டே வருகிறது
அம்மாவின் பதற்றம்.
- செல்வமணி செந்தில்
உடைந்த பாலத்தில்
அச்சமின்றி அமர்கிறது
சிட்டுக் குருவி.
- அருணா செல்வம்
இன்னும் பலரது படைப்புகளும் சிறப்பாகவே இருக்கின்றன. உங்களின் பார்வைக்கு சிலது மட்டும் இங்கு தந்துள்ளேன்.
அடுத்து வேறு ஒரு முக்கிய விசயத்துடன் …