தொடர் 19
ஈற்றடி சிறப்பு
ஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..
ஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது. இதை பலமுறை வலியுறுத்துகிறோம்..
ஏனெனில் அவ்வாறு எழுதும் போது அது ஹைக்கூவின் அழகை கெடுத்து விடும்.
இதை கவனியுங்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு கவிஞர் எழுதி நான் படித்த ஒரு கவிதை இது..
அப்பாவின் அறிவுரை
மிகவும் கசப்பாக இருக்கிறது
பாகற்காய்..!
இதில் ஈற்றடியும் பொருந்தவில்லை. முரண்பட்டும் அமைந்திருக்கிறது. அறிவுரைக்கும், பாகற்காய்க்கும் என்ன சம்பந்தம் உள்ளது ? ஒரு வேளை அறிவுரை பாகற்காயைப் போல கசப்பானது எனச் சொல்ல வருகிறார் கவிஞர் என எண்ணத் தோன்றுகிறது.
ஹைக்கூவில்… முதல் அடியோடு பொருந்தியதாக இரண்டாம் அடியும், ஈற்றடி இவ்விரண்டு அடிகளோடு இணைந்ததாகவும், பொருந்துவதாகவும் அமைதல் வேண்டும். முரண்பட்டு ஈற்றடி தனியாக நிற்கக் கூடாது.
கவிதையை எழுதியதும் படித்துப் பாருங்கள். ஹைக்கூ என்பது செய்தியல்ல. ஒரு காட்சிப் பதிவு. நீங்கள் எழுதிய ஹைக்கூவை வாசித்து முடிக்கையில் அது ஒரு காட்சியாக வாசகன் மனதில் விரிய வேண்டும்.
கீழேயுள்ள நமது கவிஞர்களின் கவிதைகளை கவனியுங்கள்..
பனிப்பொழிவிற்கு தப்பிய
இலையின் அடிபாகத்தை
ஈரமாக்கியவாறே அந்திமழை.
- முனைவர் V.புகழேந்தி.
உதிரவே இல்லை
இறந்துகிடந்த வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்கள்.
- வதிலை பிரபா
மரங்கள் வெட்டப்பட்டு
புதிதாய் நடப்பட்டது
அலைபேசி கோபுரம்.
- நாகை ஆசைத்தம்பி
வெயிலைத் துரத்த
குடையை விரிக்கிறேன்
சிக்கியது நிழல்.
- ஐ.தர்மசிங்
தோட்டத்தில் பூச்செடிகள்
நிரம்பியிருக்கும்
வீட்டினுள் நறுமணம்.
- மாதவன்.
யார் பதித்த கால்தடமோ
பறவைகளின் தாகம் தீர்க்கிறது
மழைநாட்கள்..!
- ஆ.உமாபதி
இந்தக் கவிதைகள் நிச்சயம் வாசித்து முடிந்ததும்..உங்கள் எண்ணத்தில் காட்சியாய் விரியும் என்பதில் ஐயமில்லை..
ஹைக்கூ காட்சியாய் விரிவதோடு பலவித எண்ணங்களையும் வாசகனிடத்தில் விதைக்க வேண்டும்.