பாடல் – 72
நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்
மறவனை யெவ்வுயிரும் அஞ்சுமிம் மூன்றும்
திறவதில் தீர்ந்த பொருள்.
(இ-ள்.) நிறை – புலன்கள்மேற் போகாமல் நிறுத்தப்படும், நெஞ்சு உடையானை – நெஞ்சுடையவனுக்கு, நல்குரவு அஞ்சும் – வறுமை பயப்படும்; அறனை – அறத்தையே, நினைப்பானை – நினைக்கின்றவனுக்கு, அல்பொருள் – பாவம், அஞ்சும் – பயப்படும்; மறவனை – கொலையாளிக்கு, எவ்வுயிரும் – எல்லா உயிர்களும், அஞ்சும் – பயப்படு; இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும் திறவதில் – வன்மைகளுள், தீர்ந்த பொருள் – சிறப்பாக முடிந்த பொருள்களாம்; (எ-று.)
(க-ரை.) வறுமை நிறைநெஞ்சுடையானைச் சேரவும், மறம் அறநினைப்பாளனை யணுகவும், எவ்வுயிரும் கொலையாளியைக் காணவும் அஞ்சும் என்பது.
நிறை நிறுத்தல், தொழிற்பெயர். முன்னர் அறம் என்றமையால் அல்பொருள், பாவம் அல்லது மறம் எனப்பட்டது. திறவது : பண்புப் பெயர். திறவதிற் றீர்ந்த பொருள் என்பதற்கு வேறுபாட்டில் நீங்கித் தம்முட் சிறந்த பொருளுள்களாம் என்றும் பொருள் கூறலாம்.