பாடல் – 73
இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
(இ-ள்.) இரந்துகொண்டு – (இல்லாமையால் பிறரிடம்) கெஞ்சிப் பெற்று, ஒண்பொருள் – ஒள்ளிய பொருளை, செய்வல் என்பானும் – ஈட்டுவன் என்று கூறும் இரப்போனும்; பரந்து – (பலரிடத்தும்) சென்று, ஒழுகும் நடக்கின்ற, பெண்பாலை – பெண்வகுப்பைச் சேர்ந்த வேசையை,பாசம் என்பானும் அன்புடையாளெனக் கருதும் காமுகனும் : விரி கடல் ஊடு – பரந்த கடலினடுவில், செல்வானும் – (தக்க கருவியின்றி) பொருளீட்டச் செல்லும் வாணிகனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், அரிய – செய்வதற்கு அரிய பொருள்களை, துணிந்து – பின் வாங்கலின்றி மேற்கொண்டு, வாழ்வார் – வாழ்பவர் போலத் தாழ்பவராவார்; (எ-று.)
(க-ரை.) பிச்சையெடுத்துப் பெரும்பொருள் ஈட்டுதலும், வேசை தன்னிடம் மெய்யன்புடையவளென்று நம்புதலும், வேண்டிய கருவிகளில்லாமல் திரைகடலோடித் திரவியந் தேட முயலுதலும் முடியாத செயல் என்பது.
ஒண்பொருள் – ஒருவனைப் பலருள்ளும் ஒண்மையுடையவனாகச் செய்யவல்ல செல்வம்; செய்வல் : அல் ஈற்றுத் தன்மையொருமை எதிர்கால வினைமுற்று. பரந்தொழுகுதலாவது – உள்ளம் ஒருவனைப் பற்றி நில்லாது பொருள்வளம் மிக்க பலரிடத்தும் செல்லுதல். பாசம் – பற்று; பண்பாகுபெயர். கடலூடு : ஊடு : ஏழனுருபு.