பாடல் – 74
கொலைநின்று திதின்றொழுகு வானும் பெரியவர்
புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் – இல்லெனக்கொன்
றீகென் பவனை நகுவானும் இம்மூவர்
யாதுங் கடைப்பிடியா தார்.
(இ-ள்.) கொலைநின்று – கொல்லுந் தொழிலில் நீங்காது நிலைபெற்று, தின்று ஒழுகுவானும் – (ஓருயிரை வதைத்து) அதன் இறைச்சியைத் தின்பவனும்; பெரியவர் – பெரியோர், புல்லுங்கால் – தன்னைத் தழுவும்போது, தான் புல்லும் – (அவரோடொப் பவனாகத் தன்னை மதித்துத்) தானும் அவரை எதிர் தழுவுகின்ற, பேதையும் – அறிவில்லாதவனும்; எனக்கு இல் – எனக்கு இல்லை, ஒன்றுஈக – ஒன்றை (ஒரு பொருளை) ஈயக் கடவாய், என்பவனை – என்று இரக்கின்றவனை, நகுவானும் – இகழ்வானும்; இ மூவர் – (ஆகிய) இம் மூவரும், யாதும் – யாதோர் அறத்தையும், கடைப்பிடியாதார் – உறுதியாகக் கொள்ளாதவராவர்; (எ-று.)
(க-ரை.) கொலைசெய் துண்பதும், பெரியோர் தழுவினால் அவர்க்கு வணக்கஞ் செய்யாது தானும் அவரைத் தழுவுவதும் இல்லை என்று இரப்பவனைப் பார்த்து இகழ்தலும் நல்லொழுக்கத்தை மேற் கொள்ளாதவர் செயல்களாம்.
ஈக எனப்படுவது தொகுத்தல் விகாரம் பெற்றது.