நேர்காணல் I மின்னிதழ் I லீலா தேவி கவிச்செல்வா

1. லீலா லோகநாதன்
2. மருத்துவர் தேவி
3. கவிச்செல்வா திருச்சி
இவர்களை நேர்கண்டவர்
ஜெ. பாக்கியவான்

ஜூன் 2023 / 100 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

1. லீலா லோகநாதன் எழுத்தாளர், மைமொழி இதழாசிரியர்

யார் நீங்கள்?

நான் என்பது என் எண்ணங்களாலும் செயல்களாலும் உணர்வாலும் உயிராலும்  உண்மையாக புனையப்பட்ட ஒரு கவிதை.

இன்றைய அவசர உலகில் குடும்பங்கள் அன்பை பேணுகிறதா?

நிச்சயம். குடும்பம் அன்பான கூடு…ஆயுளை நீட்டிக்கும் பேரன்பின்  பெருங்கூடெனவே  அன்பைப்பேணுகிறது.

எல்லாமே தேய்ப்பு அட்டையாக மாறிவிட்ட இன்றைய நிலையில் மனிதர்கள் செலவை சிக்கனமாக செய்கிறார்களா? ஆம் எனில் எப்படி இல்லை எனில் எப்படி யான மாற்றம் நன்மை தரும்?

இன்றைய மனிதர்களிடையே சிக்கனமில்லை.பண்டமாற்று முறை இருந்தால் நன்மை அளிக்கும் அவசியத்தேவைகளுக்கு மட்டும் பொருட்கள் வாங்குவதாக இருக்கும் அனாவசியமான விரயங்கள்  இருக்காது.

இன்றைய கல்வி முறை உங்களுக்கு திருப்தியை தருகிறதா? ஆம் எனில் எப்படி இல்லை எனில் ஏன்?

திருப்தி அளிப்பதாக இல்லை… மூளைக்குள் திணிப்பதாக இருக்கிறது. இயல்பை மீறி செயற்கை செறிவூட்டம் செய்யப்படுவதால் அளவுக்கதிகமான மன‌ரீதியான ஆரோக்கிய குறை ஏற்படுவதாகவே தோன்றுகிறது என்பார்வையில்….

ஆற்றங்கரையில் துவங்கிய நாகரீகம் இன்று சிதைவுற்றுள்ளதா அல்லது கால மாற்றத்தில் சரியான பாதையில் பயணிக்கிறதா?

சிதைவுறவில்லை …ஆனால் சரியான பாதையில் பயணிக்கிறதா என்பதும் கேள்விக்குரியே.,.

பெண்களின் முன்னேற்றத்தில் தமிழ் மொழி பங்காற்றுகிறதா?

அவரவரின் தாய்மொழி  பங்காற்றுகிறது.

தாய் மொழியில் பெருவாரியான மாணவர்கள் மதிப்பெண் குறைத்துப் பெறுவதை உணர்கிறீர்களா…பெற்றோரில் பலர் அதை ஒரு பொருட்டாக கருதுவதில்லையே ஏன்?

நிச்சயம் உணர்கிறேன். பெற்றோர்கள் அதை ஒரு பொருட்டாக ஏன் உணர்வதில்லையெனில் தாய்மொழியில் அதிக மதிப்பெண் பெறுவதனால் எந்த பலனுமில்லை என்பதாலும் அரசு சலுகைகளில் தாய்மொழியில்அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு முக்கியத்துவம்  தந்தால்  வேலை வாய்ப்புகளுக்கும் தனித்துவம் தருவார்களேயானால் தாய்மொழியில்  இனிவரும் காலங்களில் மதிப்பெண் கூட வாய்ப்புண்டு..

(உதாரணமாக)

கர்நாடகாவில் சி.பி.எஸ்.இ கல்வி வழியானாலும், ஸ்டேட்போர்டு, கல்வியானாலும் ஐ.சி.எஸ்.இ வழி கல்வியானாலும்  சரி கனடமொழி ஒரு வகுப்பு கட்டாயம் படிக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.

கேரளாவிலும் இம்முறையே பின்பற்றப்படுகிறது இதை தமிழ்நுட்டிலும் செயல்படுத்தினால் தாய்மொழிக்கல்வியின் முக்கியதுவம் பெருகும்.

உடல் திறன் விளையாட்டுகளில் இளம்பிள்ளைகள் ஆர்வம் கூட என்ன செய்ய வேண்டும்?

அலைபேசியை  தவிர்த்து விட்டு… உடல்திறன் விளையாட்டின் மதிப்பெண்ணையும்,ஒட்டுமொத்த மதிப்பெண்ணின் கூடுதலோடு இணைத்து கணக்கீடு செய்தால் இளம்பிள்ளைகள்  ஆர்வம் விளையாட்டில்  திரும்பும்.

இயல்பாக பெருவாரியான பிள்ளைகளுக்கு தெரிந்த நீச்சல் இன்று இளைஞர்களுக்கு கூட தெரிவதில்லையே ஏன்? இதை மாற்ற ஏதும் வழியுண்டா?

நீரிநிலைகள் அழிந்து வரும் சூழலில் நீச்சல் தெரிவதில்லை என்பது வருந்தத்தக்கதான ஒரு  விசயமாகவே உள்ளது. இதை மாற்ற பள்ளி கல்லூரிகளில் இதற்கு பயிற்சி தந்து ஊக்குவிக்கலாம்.நிச்சயம் மாறும் என நம்புகிறேன்.

புதிதாக தமிழில் ஐந்து கலைச்சொல் கூறுங்களேன்?

தமிழே கலைச்சொல் தான் அதில் உள்ள அத்தனை சொல்லும் கலைச்சொல்லே இதில்  தனியாக குறிப்பிட்டு சொல்ல ஏது?…

2. ஐந்திணை தமிழ்ச் சங்க நிறுவனர் சகோதரி மருத்துவர் தேவி

யார் நீங்கள்?

இந்த உடலுக்கு வைக்கப்பட்ட பெயர் தேவி… இந்தப் பிறவியில் இந்த உடல் ஏற்ற ஆத்மா மருத்துவராக, பெருமாள் பக்தையாக, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றும் சேவகியாக, கவிஞராக, எழுத்தாளராக பேச்சாளராக, இன்னும் சமூக நலன் விரும்பியாக , குடும்பத் தலைவியாக தன்னால் இயன்றதை செய்கிறது. ஆனால் உண்மையில் நான் எனும் ஆத்மாவிற்கு உருவமில்லை.. அது ஏற்ற கூட்டைப் பிரிந்தப்பின் வேறு கூட்டை அடைந்து வேறு பெயர் சூட்டப்படும்.

இன்றைய அவசர உலகில் குடும்பங்கள் அன்பை பேணுகிறதா?

அன்பென்ற ஒன்று இருப்பதால்  தான் குடும்பம் என்ற கட்டமைப்பு இயங்கிறது.  ஆயினும் என்ன, பெரிய கூட்டுக்குடும்பம் என்ற நிலை மாறி , தனிக்குடும்பமாக இயங்குகிறது. வேலை பளு காரணமாக நிறைய நேரங்கள் குடும்பத்திற்கு செலவிட இயலவில்லையே தவிர அன்பை பேணுவதில் என்றும் மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கின்றனர்.

எல்லாமே தேய்ப்பு அட்டையாக மாறிவிட்ட இன்றைய நிலையில் மனிதர்கள் செலவை சிக்கனமாக செய்கிறார்களா? ஆம் எனில் எப்படி இல்லை எனில் எப்படி யான மாற்றம் நன்மை தரும்?

இல்லை. தேய்ப்பு அட்டை வந்தது நமது நேரம் வீணாவதைத் தடுக்கத்தான். ஆனால், மாதம் ஒன்றாம் தேதி வருமானத்தை வாங்கி அதில் மாத கட்டாயச் செலவுகளுக்கு எடுத்து வைத்து சேமிப்பிற்கு எடுத்து வைத்து மீதியிருக்கும் தொகையில் கணக்குப் போட்டு எண்ணி செலவு செய்து வந்தோமே… அது, எல்லைக்கு மீறிய செலவுகளை செய்யாது காத்தது.

இன்றைய, இந்த தேய்ப்பு அட்டை முறை பல நேரங்களில் கணக்கில் பணம் தீர்ந்தப்பின் தான்  நமக்கே தெரியும் அப்புறம் என்ன கடன் அட்டையை பயன்படுத்தி முன் கூட்டி கடனாக பொருட்கள் வாங்கி அந்த கடனை அடைக்க படும்பாடு… பெரும்பாடு ஆகும்.

ஆகையால்,

1) வரவையும் செலவையும் கணக்கில் கொண்டு எழுதி வைத்துச் செலவு செய்தால் இந்த தடுமாற்றத்தைத் தவிர்க்கலாம் கடனின்றி வாழலாம்.

2) தனியாக ஒரு கணக்கில் இவ்வளவு தான் வீட்டு செலவிற்கு  போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்

3) கடன் தேய்ப்பு அட்டையில் வாங்கும் பொருட்களுக்கான தொகையை சம்பளம் வந்ததும் முதலில் செலுத்திவிட்டு மீதமுள்ளத் தொகைக்குள் செலவு செய்ய வேண்டும்.

இதைத்தான் நான் செய்கிறேன்.

இன்றைய கல்வி முறை உங்களுக்கு திருப்தியை தருகிறதா? ஆம் எனில் எப்படி இல்லை எனில் ஏன்?

இன்றைய கல்வி முறை திருப்தியைத் தரவில்லை. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் மன அழுத்தம் மிகுந்ததாக உள்ளது

ஆற்றங்கரையில் துவங்கிய நாகரீகம் இன்று சிதைவுற்றுள்ளதா அல்லது கால மாற்றத்தில் சரியான பாதையில் பயணிக்கிறதா?

கால மாற்றத்தில் பயணிக்கிறது.  இது, சரியான பாதையா என்றால், சில இப்படியும் , சில அப்படியுமாகவே இருக்கிறது. ஆயினும் மாற்றங்கள் பல நன்மைத் தருவன தான். எனவே, மாறாத மாறமும் மாறும் வரவேற்போம். 

பெண்களின் முன்னேற்றத்தில் தமிழ் மொழி பங்காற்றுகிறதா?

பொதுவாக பெண்களின் முன்னேற்றம் என்பது மொழி, மதம், நாடு.. என்பதை யெல்லாம் கடந்து அவர்களின் தனித்தன்மையாலும் திறமையாலும் அறிவாற்றலும் தான் இருக்கும்.  இதில், வேண்டுமானால் தன் கணவரோ , உடன் பிறந்தவரோ , நட்பில் உள்ளோரோ  உற்சாகமூட்டி பக்க பலமாக இருக்கலாமே அன்றி மொழி அவ்வாறு பங்காற்ற இயலாது. எனவே, மொழியை நாம் நமது சிந்தனைகளை அறிவார்ந்த விடயங்களை வெளிப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ள மட்டுமே முடியும்.

தாய் மொழியில் பெருவாரியான மாணவர்கள் மதிப்பெண் குறைத்துப் பெறுவதை உணர்கிறீர்களா…பெற்றோரில் பலர் அதை ஒரு பொருட்டாக கருதுவதில்லையே ஏன்?

ஆம், தாய்மொழியில் பெருவாரியான மாணவர்கள் குறைவான மதிப்பெண்களே பெறுகிறார்கள். உணர்கிறோம்.   காரணம் எந்த துறை சார்ந்த மேல் படிப்பிற்கும் தமிழ் மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையே. கணிதம் வேதியியல் உயிரியல் இயற்பியல் என இவைதானே தேவைப்படுகிறது.

உடல் திறன் விளையாட்டுகளில் இளம்பிள்ளைகள் ஆர்வம் கூட என்ன செய்ய வேண்டும்?

உடல் திறன் விளையாட்டுப் பற்றிய புரிதலையும் நன்மைகளையும் எடுத்துச் சொல்லி… உடல் பலமாக இருந்தால் தான் மனமும் பலமாக இருக்கும் என்பதையும் போட்டியான இந்த உலகில்  அறிவை மட்டும் வைத்துக் கொண்டிருந்தால் போதாது அதை செயல்படுத்த நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்ட உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் அதற்கும் மேல் மனநிலைக்கு தக்க மாற்றம் தந்து மன அழுத்தத்தைப் போக்கவும் விளையாட்டு தேவைப்படுகிறது என்பதை அறிவுறுத்த வேண்டும்.

இயல்பாக பெருவாரியான பிள்ளைகளுக்கு தெரிந்த நீச்சல் இன்று இளைஞர்களுக்கு கூட தெரிவதில்லையே ஏன்? இதை மாற்ற ஏதும் வழியுண்டா?

இன்றைய கால கட்டத்தில் பந்தயக் குதிரைகளாக ஓடும் குழந்தைகளுக்கு கழுதையைக் காட்டிலும் அதிகம் பொதி சுமக்கத் தேவையாகிறது. அது மட்டுமல்லாமல்  இன்றைக்கு குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க நேரம் குழந்தைகளின் பெற்றோருக்கு இருப்பதில்லை. இதற்கான வகுப்புகளுக்கும் தொகை அதிகம் கட்ட வேண்டியுள்ளது. இருந்தும் சில இடங்களில் பாதுகாப்பற்றத் தன்மை நிலவுகிறது. ஆகையால் தான் அதிகம் நீச்சல் கற்றுக்கொடுப்பதில்லை. மீண்டும் பழைய காலம் திரும்பினால் மாற்றத்திற்கு வழியுண்டு.

புதிதாக தமிழில் ஐந்து கலைச்சொல் கூறுங்களேன்

முகக்கவசம்

மகிழுந்து

புலனம்

பற்றியம்

மின்தூக்கி

3. கவி செல்வா திருச்சி

யார் நீங்கள்?

நான் யாரென்ற கேள்விக்கு நானே பதில் தேடிக் கொண்டிருக்கிறேன் ஆனால் இதுவரை பதில் கிடைக்க வில்லை.  இனிமேலும் கிடைக்காது, காரணம் கண்ணதாசனாலேயே பதில் சொல்ல முடியாத கேள்வி இது. என்னால் மட்டும் எப்படி ?

ஒருவரின் கவிதை எப்படி இருக்க வேண்டும்?

சொல்லுடன் பொருள் கலந்து சுவையூட்ட வேண்டும்.  அழுகையும் சிரிப்பையும் அதில் அடக்க வேண்டும்.  கள்ளாத மானிடனும் கருத்து சொல்ல வேண்டும். அப்படி எழுதினாலே அது கவிதைதான்.

எல்லோராலும் கவிதை எழுத இயலுமா? விளக்கமாக கூறவும்.

எழுதப்படிக்க தெரியாதோரையும் சொல்லச் சொல்லி கவிதை எழுதலாம்.  கவிதை என்பது கல்லூரியில் படிக்கும் பாடமல்ல கற்பனையில் உதிப்பது. காதலோ, காமமோ, இயற்கையோ, செயற்கையோ முதலில் அதை ரசிக்கத் தெரிய வேண்டும்.  ரசனை இல்லாத எவறாலும் கவிதை எழுத இயலாது.

உங்கள் இலட்சியம் என்ன?

என் இலட்சியம் பற்றி இங்கே பதில் சொன்னால் அது அரசிலாகிவிடும் வேண்டாமே.

இத்தனை வருட உங்கள் வாழ்க்கை பயணத்தில் எதையாவது சாதித்ததாக உணர்ந்துள்ளீர்களா? உணர்ந்தால் அது எது? இல்லை யெனில் சாதிக்க விரும்புவது எது?

நான் பெண்ணாக பிறந்து, இந்த சமுதாயத்தில் தன்னம்பிக்கையோடு தைரியமாக வாழ்வதையே மிகப்பெரிய சாதனையாகத்தான் பார்க்கிறேன். அதோடு தன்மானமிக்க தமிழச்சியாய் எனது 21ஆண்டுகால காவல்துறை பணியையே டாக்டர் கலைஞர் அவர்களுக்காக தைரியமாக துறந்ததையும் நான் சாதனையாகத்தான் நினைக்கிறேன்.

பொதுவெளியில் ஆங்கிலம் கலந்து பேசுவது ஆங்கிலேயர் காலத்தை விட இன்று அதிகமாயிற்று என்பதை ஏற்கிறீர்களா? அதை மாற்ற ஏதேனும் ஆலோசனை உண்டா. ?

ஆம் ஏற்கிறேன். அதை மாற்ற முடியாது காரணம் பள்ளிக்கூடத்திலேயே ஆங்கிலத்தை  பாடமாக வைத்து அனைவரும் கட்டாயமாக படிக்கிறோம் ஆகவே அதை மாற்ற முடியாது. ஆனால் அவசியம் இல்லாத இடத்தில் ஆங்கிலம் பேசாமல் தவிர்க்கலாம். ஆங்கிலத்தைப் போலவே ஹிந்தியையும் கட்டாய பாடமாக்க அனுமதிக்காமல் இருந்தால் தான் தமிழ் தப்பிக்கும்.

 சமகால இலக்கியங்கள் என எதையும் சொல்ல இயலவில்லையே ஏன்? இயலும் எனில் எது?

சங்க கால இலக்கியங்கள் இக்கால சந்ததியினருக்கு சரியாக கற்பிக்கப் பட வில்லை. அதனால் தான் யாராலும் சமகால இலக்கியத்தை பிரித்துணர முடியவில்லை.

இங்கிலீஸ் பேசினாலும் தமிழன்டா இது சரியா?

ஆமாம் சரி.  ஆங்கிலம் பேசுகிறான் என்பதால் அவன் தமிழன் இல்லை என்றாகிவிடுமா? வெளி நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் அரபி பேசுகிறார்கள் அதற்காக அவன் இனம் மாறிவிடுமா என்ன? ஆனால் தன் இனம் தன் மொழி மீது பற்று இல்லாமல் ஆங்கில மோகத்தில் அலைவது அவலம்.

சாகப்பிறந்த வாழ்வு சிறக்க பணம் ஒன்றே போதும் என்று ஆகிட்டதா?

ஆமாம். சாவை தடுக்கவும் சாகவும் பணம் தான் காரணம்.  பணம் இல்லை என்றால் வாழவே முடியாது. பந்த பாசம் எதுவாகினும் பணம் தான் மூலகாரணம்.

உறவுகள் உறவாக உள்ளதா?

உறவுகள் உறவாக இல்லை. கூட்டுக் குடும்பங்கள் எப்போது போனதோ அப்பவே உறவுகள் உடைந்து சுக்கு நூறாகி விட்டது. அதை இனி ஒட்ட வைக்க முடியாது.


3 Comments

Raju Arockiasamy · ஜூன் 1, 2023 at 16 h 47 min

70 அருமையான வருடங்கள்… தங்கள் பிறந்த நாளுக்கு என் முன்கூட்டிய வாழ்த்துகள்… என்றும் என் பிரார்த்தனைகள் , இன்னும் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் பணிக்காக…தங்கள் சேவை உலகறியும்… நன்றிகள் அய்யனே!

Balu M · ஜூன் 1, 2023 at 17 h 40 min

I Like Thamil

வையைத்தமிழ்ச்சங்கம் · ஜூன் 1, 2023 at 17 h 44 min

“ஆழ்வார்கள் சுட்டும் திருமால் திருப்பெயர்கள்”

அருமை ஐயா. நூலில் உள்ள இயல்கள் அனைத்தையும் மிக நுண்ணிய பார்வையோடு ஒரு நூலின் மதிப்புரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒப்ப மிக அருமையான மதிப்புரை வழங்கிய தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகனார்க்கும், அருமையான மதிப்புரையைப் பதிப்பித்த தமிழ்நெஞ்சம் அமின் ஐயா அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்தும்.

வையைப் பதிப்பகம் தேனி நாகலாபுரம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »