பாடல் – 71
உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர்
தொடுத்தாண் டவைப்போர் புகலும் – கொடுத்தளிக்கும்
ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும்
காண அரியவென் கண்.
(இ-ள்.) உடுத்த ஆடை – உடுக்கப்பட்ட ஆடை, இல்லாதார் – இல்லாதவர், நீர் ஆட்டும் – நீராடுதலும்; பெண்டிர் பெண்கள், தொடுத்து – (பிறரோடு) வழக்குத் தொடுத்து, ஆண்டு – அங்குள்ள, அவை – சபைகளிடத்தில், போர் புகலும் – போர்க்குப் புகுதலும்; கொடுத்து – பிறர்க்குக் கொடுத்து, அளிக்கும் காக்கின்ற; ஆண்மை யுடையவர் – ஆண் தன்மையுடையவரது, நல்குரவும் – வறுமையும், இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும், என் கண் – என் கண்கள், காண அரிய – பார்க்கத் தகுவன வல்லவாம்; (எ-று.)
(க-ரை.) ஆடையின்றி நீரில் இறங்கிக்குளிப்பதும், பெண்கள் வழக்குத் தொடுத்து மன்றேறுதலும், கொடையாளர்கள் வறுமை யுறலும் காணக்கூடிய வல்ல என்பது.
உடுத்தாடை என்பதில் உடுத்த என்ற பெயரெச்சத்து ஈறு தொகுத்தல். ஆட்டு : பிறவினை முதனிலைத் தொழிற்பெயர். நல்குரவு என்ற தொழிற் பெயரில் நல்கூர் முதனிலை. “உடுத்தலால் நீராடார், ஒன்றுடுத் துண்ணார், உடுத்தாடை நீருட் பிழியார் – விழுத்தக்கார், ஒன்றுடுத்தென்றும் அவைபுகார் என்பதே, முந்தையோர் கண்ட முறை” என்ற ஆசாரக்கோவை யடிகளும் காண்க.