பாடல் – 17
மூப்பின்கண் நன்மைக் ககன்றானும் கற்புடையாள்
பூப்பின்கண் சாராத் தலைமகனும் – வாய்ப்பகையுள்
சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர்
கல்விப் புணைகைவிட் டார்.
(இ-ள்.) மூப்பின்கண் – மூப்பு வந்த இடத்தும் , நன்மைக்கு – துறவறத்துக்கு, அகன்றானும் – (அஞ்சி) நீங்கினவனும் கற்பு உடையாள் – கற்புடைய மனைவியை, பூப்பின்கண் பூத்து நீராடிய பின், சாரா – மருவாத, தலைமகனும் – கணவனும், வாய்ப் பகையுள் – (சோர்வாலுண்டாகின்ற) வாய்மொழிப்பழி நான்கனுள், சொல்வென்றி – (தான் கூறிய) சொல்லினது வெற்றியை, வேண்டும் – விரும்பித் துணிகின்ற, இலிங்கியும் – தவவேடத்தானும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், கல்விப் புணை – கல்வியறிவாகிய தோணியை, கைவிட்டார் – முற்றும் நீங்கினவராவர்; (எ-று.)
(க-ரை.) மூப்புப் பருவத்திலும் துறக்காதிருப்பவனும், மனைவியைச் சார்ந்திருக்கக் குறித்த காலத்தில் சேராத கணவனும், வீண் மொழியாடும் துறவியும் கல்வியறிவைக் கைவிட்டவராதலின் உய்விலர்.
மூப்பின் – மூப்பினும் : எல்லா இன்பங்களையும் நுகர்தற் கியலாமையால். உம் : இழிவு சிறப்பினது. மூப்பு : என்ற குறிப்பால் நன்மை துறவறமெனப்பட்டது. நன்மை : பண்பாகு பெயர். அகன்றான் – அகல் : பகுதி. பூப்பு – மகளிர் சூதகம். இது கண்ட முதல் மூன்று நாளும் சேராது நான்காம் நாள்முதல் பதினாறாம் நாள்வரை பூப்புற்ற மனைவியை கணவன் சேர்ந்து வாழ்தலே முறை என்பது உடலியல் நூலோர் கூற்று. “பூத்த காலைப் புனையிழை மனைவியை, நீராடியபின் ஈராறுநாளும், கருவயிற்றுறூஉங் காலமாதலிற், பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன்,” என்ற அகப்பொருள் விளக்கம் 91ஆவது சூத்திரப்படி நீராடிய பின் பன்னிரண்டு நாளுங் கருப்படுங்காலமாதலிற் பரத்தையிற் பிரிந்த தலைமகனும் அப் பன்னிரண்டு நாளும் தலைவியைப் பிரிந்து உறைதலாகாது என்பது விளங்கும். இது, “பூப்பின் புறப்பாடீராறு நாளும், நீத்தகன் துறைதல் அறத்தா றன்றே, பரத்தையிற் பிரிந்த காலை யான” என்று தொல்காப்பியனாரும், “தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்நீ ராடியபின், ஈராறு நாளும் இகவற்க என்பதே, பேரறிவாளர் துணிவு” என்று ஆசாரக் கோவை யாசிரியர் பெருவாயில் முள்ளியாருங் கூறியவற்றானும் வலியுறுத்தப்படும். வாய்ப்பகை – வாய்மொழிப்பகை; அவை, பொய், கடுஞ்சொல், குறளை, பயனில் சொல் என்ற நான்கும், இவை தீமையைத் தருவதால் பகையெனப்படும். வென்றி, மூப்பு : தொழிற் பெயர்கள். லிங்கி – இலிங்கி – இலிங்கம் அணிந்தவர். கல்வி : காரணவாகு பெயர். “வாய்ப்பின்கட் சாராத் தலைமகனும்” என்ற பாடங்கொண்டு பொருந்துங் காலத்துச் சேராத கணவனும் என்று பொருள் கூறுதலும் ஒன்று.