பாடல் – 15
பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் – ஊழினால
ஓட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா;
நட்கப் படாஅ தவர்.
(இ-ள்.) பொய் – பொய்ச் சொற்களை, வழங்கி – பேசி, வாழும் – (அதனால் உயிர்) வாழ்கின்ற, பொறி அறையும் – திருவில்லாதவனும், கை – முறைமை, திரிந்து – வேறுபட்டு, தாழ்வு இடத்து – (ஒருவன்) தாழ்ந்த இடத்து, நேர் – (அவனைத் தனக்கு) நேராக, கருதும் – நினைக்கின்ற, தட்டையும் – மூங்கில் போலும் (புரைபட்ட) மனத்தவனும், ஊழினால் – (ஒருவனைச் சேரவேண்டிய) முறையினால், ஒட்டி – சேர்ந்து, வினை – (அவன்) காரியத்திலே, நலம் (தனக்குப்) பயன், பார்ப்பானும் – பார்க்கின்றவனும், இ மூவர் – ஆகிய இம் மூவரும், நட்க – (யாவராலும்) நட்புக் கொள்ள, படாஅதவர் – தகாதவர்; (எ-று.)
(க-ரை.) “பொய் சொல்லும் வாய்க்குப் போசனம் கிடையாது” என்றபடி பொய் சொல்பவனிடம் செல்வம் நிலையாது; தனக்கு மேம்பட்டவன் ஏதாவது காரணத்தால் தாழ்வடைந்த காலத்தும், அவனைத் தனக்கு மேலானவனாகவே கருதவேண்டும்; நட்புச் செய்யப்பட்டவனிடமிருந்து தனக்கு என்ன பயனுண்டாமென்று எதிர்பார்த்தல் தகாதது.
பொறி – இலக்குமி; இங்குச் செல்வத்தைக் குறித்தது – அறை – அறுதலையுடையவன், ஐ : கருத்தாப் பொருள் விகுதி, இனிப் பொறி அறை என்பதற்கு அறிவற்றவன் என்றும் பொருள் கூறலாம். கை – ஒழுக்கம். தட்டை – மூங்கில்; மேலோரை வணங்காமையால் தட்டை என அஃறிணைப் பொருளாகக் கூறப்பட்டது; உவமையாகு பெயர். ஊழ்-முறைமை. நட்கப்படாதவர் : வினையாலணையும் பெயர்; நள் : பகுதி, கு : சாரியை, ப் : சந்தி, படு : செயப்பாட்டு வினைப் பொருள் விகுதி, உகரக்கேடும், ளகரத்திரிபும் சந்தி. நட்கப்படு என்ற பகுதியுடன் ஆ : எதிர்மறை விகுதி, த் : விரித்தல் விகாரம், அ : சாரியை, வ் : சந்தி, அர் : பலர்பால் விகுதி, பொறியறை, தட்டை என்ற இரண்டும் உயர்திணைச் சிறப்புப் பெயராகிய பார்ப்பான் என்பதோடு விரவிச் சிறப்பினால் உயர்திணை முடிபேற்றன : படாஅதவர் : இசைநிறை அளபெடை.