பாடல் – 13
சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
குடியோம்பல் வல்லான் அரசன் – வடுவின்றி
மாண்ட குணத்தான் தவசியென் றிம்மூவர்
யாண்டும் பெறற்கரி யார்.
(இ-ள்.) சீலம் – (பிறர்) குணத்தை, அறிவான் – அறிந்து நடக்கிறவன், இளம் கிளை – இளமை (தொட்டு வந்த) சுற்றத்தானாவான், சால – மிகவும், குடி – குடிகளை, ஓம்பல் – பேணுதலில், வல்லான் – வல்லவன், அரசன் – அரசனாவான், வடுஇன்றி – குற்றம் இல்லாமல், மாண்ட – மாட்சிமைப்பட்ட, குணத்தான் – குணத்தையுடையவன், தவசி – தவசியாவான், என்ற – என்று சொல்லப்பட்ட, இ மூவர் – இம் மூவரும், யாண்டும் – எவ்விடத்தும், பெறற்கு – பெறுதற்கு, அரியார் – அரியராவார்; (எ-று.)
(க-ரை.) பிறர் குணம் அறிந்து நடக்கவல்ல சுற்றத் தானும், குடிகளைக் காக்கவல்ல அரசனும், குற்றமில்லாது துறவோடிருக்கவல்ல தவசியும் எல்லாராலும் தேடிப் பெற வேண்டுபவராவர்.
இளங்கிளை – புத்திரனாவான் என்பதுமுண்டு. இளமையாகியகிளை : பண்புத்தொகை. இளமை என்பதற்கு இளமை தொட்டு வந்த என இலக்கணையாற் பொருள் கொள்ளப்பட்டது; கிளை – சுற்றத்தார்க்கு உவமையாகுபெயர். சால : உரிச்சொல்; மிகுதி யென்னும் பொருட்டு. குடியோம்பல் – தளர்ந்த குடிகளைப் பேணல். அஃதாவது ஆறிலொன்றாகிய இறைப் பொருளையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும் ஆம். மாண்ட மாண், பகுதி; மாண்ட : பெயரெச்சம். தவசி : காரணப் பெயர். தவசு : பகுதி. தவமாவது – மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்கல் முதலாயின. அரியார் என்பதில் அருமை என்னும் பகுதி இன்மை யென்னும் பொருட்டு.