பாடல் – 12

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.

(இ-ள்.) தாள் ஆளன் என்பான் – முயற்சியை ஆளுதலுடையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், கடன்படா – கடன் படாமல், வாழ்பவன் – வாழ்தலுடையவன், வேள் ஆளன் – உதவி யாளன், என்பான் – என்று சொல்லப்படுவோன், விருந்து – வந்த விருந்தினர், இருக்க – பசித்து இருக்கையில், உண்ணாதான்- (தனித்து) உண்ணாதவன், கோள் ஆளான் – (பிறர் அறிந்த காரியங்களை மனத்திற்) கொள்ளுதல் உடையவன், என்பான் – என்று சொல்லப்படுபவன், மறவாதான் – கேட்டவற்றை மறவாதவன், இ மூவர் – இம் மூவரும், கேள் ஆக – தனக்கு நட்பினராயிருக்க, வாழ்தல் – (ஒருவன்) வாழ்வது, இனிது – (அவனுக்கு) நன்மை தருவதாகும்; (எ-று.)

(க-ரை.) கடன்படாது வாழ்வதே நல்ல முயற்சி யென்பதும் வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணுதலே சிறந்த உதவி என்பதும், தான் ஒருவர் சொல்லியவற்றை மறவாது மனத்திற் கொண்டிருத்தலே நற்சிந்தை என்பதும் ஆம்.

தாள் – முயற்சி, வேள் – உதவி, என்பான் – என்று சொல்லப் படுபவன் : செயப்பாட்டுவினை செய்வினையாக வந்த வினையாலணையும் பெயர்; என்: இடைச்சொல்; பகுதி, “எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்” என்ற கம்பர் தனிக் கவியடியும் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்ற உண்மையை விளக்கும். பாடா : எதிர்மறை வினையெச்சம், து விகுதி கெட்டது. இருக்க : செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம். ஆக : செயவென் வாய்பாட்டு வினையெச்சம். கோள் : முதனிலை திரிந்த தொழிற் பெயர். விருந்து, கேள் : இவை பண்பாகு பெயராய் விருந்தினரையும் கேளிரையும் உணர்த்தும். கோளாளன் என்பதற்கு ஆசிரியர் கூறிய நூற்பொருளை அமையக் கொள்ளும் மாணாக்கன் என்று சொல்லப்படுவோன் கேட்டவற்றை மறத்தலில்லாதவன் எனலும் ஆம்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »