பாடல் – 12
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.
(இ-ள்.) தாள் ஆளன் என்பான் – முயற்சியை ஆளுதலுடையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், கடன்படா – கடன் படாமல், வாழ்பவன் – வாழ்தலுடையவன், வேள் ஆளன் – உதவி யாளன், என்பான் – என்று சொல்லப்படுவோன், விருந்து – வந்த விருந்தினர், இருக்க – பசித்து இருக்கையில், உண்ணாதான்- (தனித்து) உண்ணாதவன், கோள் ஆளான் – (பிறர் அறிந்த காரியங்களை மனத்திற்) கொள்ளுதல் உடையவன், என்பான் – என்று சொல்லப்படுபவன், மறவாதான் – கேட்டவற்றை மறவாதவன், இ மூவர் – இம் மூவரும், கேள் ஆக – தனக்கு நட்பினராயிருக்க, வாழ்தல் – (ஒருவன்) வாழ்வது, இனிது – (அவனுக்கு) நன்மை தருவதாகும்; (எ-று.)
(க-ரை.) கடன்படாது வாழ்வதே நல்ல முயற்சி யென்பதும் வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணுதலே சிறந்த உதவி என்பதும், தான் ஒருவர் சொல்லியவற்றை மறவாது மனத்திற் கொண்டிருத்தலே நற்சிந்தை என்பதும் ஆம்.
தாள் – முயற்சி, வேள் – உதவி, என்பான் – என்று சொல்லப் படுபவன் : செயப்பாட்டுவினை செய்வினையாக வந்த வினையாலணையும் பெயர்; என்: இடைச்சொல்; பகுதி, “எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்” என்ற கம்பர் தனிக் கவியடியும் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்ற உண்மையை விளக்கும். பாடா : எதிர்மறை வினையெச்சம், து விகுதி கெட்டது. இருக்க : செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம். ஆக : செயவென் வாய்பாட்டு வினையெச்சம். கோள் : முதனிலை திரிந்த தொழிற் பெயர். விருந்து, கேள் : இவை பண்பாகு பெயராய் விருந்தினரையும் கேளிரையும் உணர்த்தும். கோளாளன் என்பதற்கு ஆசிரியர் கூறிய நூற்பொருளை அமையக் கொள்ளும் மாணாக்கன் என்று சொல்லப்படுவோன் கேட்டவற்றை மறத்தலில்லாதவன் எனலும் ஆம்.