பாடல் – 11
விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்
களியாதான் காவா துரையுந் – தெளியாதான்
கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்
ஊரெல்லாம் நோவ துடைத்து.
(இ-ள்.) விளியாதான் – (தன்னை) அழையாதவன், கூத்து ஆட்டு – கூத்தாட்டத்தை, காண்டலும் – (தான் சென்று) பார்ப்பதும், வீழ – (தளர்ந்து) விழும்படி, களியாதான் – மதுவுண்டு களியாதவனாயிருந்தும், காவாது – காவாமல், உரையும் – (வழுப்படச்) சொல்லுதலும், தெளியாதான் – (தன்னை) நம்பாதவன், கூரையுள் – வீட்டிலே, பல்காலும் – பலமுறையும், சேறலும் – செல்லுதலும், இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், ஊரெல்லாம் – ஊரிலுள்ளோரெல்லாரும், நோவது – துன்பப்படுங்குற்றத்தை, உடைத்து – உடையன; (எ-று.)
(க-ரை.) அழைக்கப்பெறாத ஆட்டத்தைக் காணப்போவதும், களியன்போல் காவாது உரைத்தலும், தன்னை நம்பாதவன் வீட்டிற் செல்லுதலும், வருந்தத்தக்க குற்றங்களாம்.
கூத்து – நாடகம்.ஆட்டு – ஆடுதல், ஆட்டு : விகாரப்பட்ட முதனிலைத் தொழிற் பெயர், “கூத்தாட் டவைக்குழாத் தற்றே” என்ற திருக்குறள் 332 இலும் கூத்தாட்டு, கூத்தாடுதல் என்னும் பொருளில் வந்துள்ளது. கூத்தாகிய ஆடல் எனின் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை, களி -கள்ளுண்ணுதலால் ஏற்படும் வெறி; இதையுடையவன் களியெனப் படுவான். விளியாதான், களியாதான், தெளியாதான் : வினையாலணையும் பெயர்கள். உரை : முதனிலைத் தொழிற்பெயர். பல்காலும், உம் : முற்றுப் பொருளானது. நோவது – நோவதற்கு ஏதுவானது; நோ : பகுதி முதல் நீண்டது. அ : சாரியை, து : ஒன்றன்பால் விகுதி, இம் மூன்றும் உடைத்து என்பது பன்மையில் ஒருமை மயக்கம். ஊர் : இடவாகு பெயர். விளியாதான். கூத்தாட்டுக் காண்டல் என்பதற்கு இனிமையாகப் பாடாதவன் கூத்தாட்டத்தைச் செய்தலும் என்றும் கூறலாம். விளித்தல் – ஒலித்தல், ஈண்டுப் பாடலின் மேற்று. காண்டல் – செய்தல்; “முனைவன் கண்டது முதனூல்” என்பதிற் காண்க. கூரை : சினையாகு பெயராய் வீட்டையுணர்த்திற்று.