நூல்
பாடல் – 01
அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்புமிம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.
(பொருள்) :
அருந்ததி – அருந்ததி போலும், கற்பினார் – கற்பையுடைய மகளிரது, தோளும் – தோள்களும், திருந்திய – குற்றமற்ற, தொல் – பழமையான, குடியில் – குடிப்பிறப்பில் (தோன்றி), மாண்டார் – மாட்சிமையடைந்தவரோடு, தொடர்ச்சியும் – கொள்ளும் நட்பும், சொல்லின் – சொற்களினுடத்தே, அரில் – குற்றங்களை, அகற்றும் – நீக்கவல்ல, கேள்வியார் – கேள்வியையுடையவரோடு, நட்பும் – செய்யப்படும் நட்பும், இம்மூன்றும் – இந்த மூன்றும், திரிகடுகம் போலும் – (ஒருவனுக்கு) திரிகடுகம் போன்றுள்ள, மருந்து – மருந்துகளாம்;
(கருத்துரை) :
நற்குண நற்செய்கைகளுள்ள பெண்ணை மணஞ்செய்திருப்பது முதலிய மூன்றும் இம்மை மறுமைகளில் நேரிடும் துன்பங்களைத் தீர்த்து இன்பங் கொடுப்பவாதலால் நோயைப் போக்கி நலத்தைக்கொடுக்கும் சுக்கு திப்பிலி மிளகுகளாகிய மருந்துபோலும் என்பது.
“திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி முதலிய மூன்றும் இல்வாழ்வானொருவனுக்குத் துன்பம் அகற்றி இன்பம் விளைத்தலால், அவை உவமைகளாயின, இம்முதற்பாட்டிற் கூறப்பட்ட ‘திரிகடுகம்’ என்ற சொல்லே சிறப்பு நோக்கி இந்நூலுக்குப் பெயராகக் கொள்ளப்பட்டது; உவமையாகு பெயர்.
அருந்ததி – எழு முனிவருள் ஒருவராகிய வசிட்டர் மனைவி கற்புடையார், பலரினும் இவர்க்கு உயர்வு எங்ஙனம் எனில், விண்மீன் நிலையிலும், எழுமுனி வட்டம் என்ற நாட்கூட்டம் முன்பக்கம் அடியில் இருக்கும் மூன்று விண்மீன்களில் நடுவிலிருப்பதான வசிட்ட மீனொடு துணையாய் மின்னுவது. மாண்டார் – சிறந்தார், மாண் – முதனிலை உரிச்சொல். அரில் – ஐயந்திரிபுகள், சொல்லின் அரில் அகற்றுங் கேள்வியார் என்ற தொடரிலுள்ள பொருளோடு ‘நுணங்கிய கேள்விய ரல்லார்’ என்ற குறளின் கருத்தை ஒப்பு நோக்குக.