தொடர் – 47
எந்தவொருக் கவிதை வடிவமும் மற்றவர்களால் விமர்சனத்திற்கு ஆட்படுவது இயற்கையே..
மரபாகிலும் சரி… அதன்பின் புதுக்கவிதை..நவீனக்கவிதை தொட்டு இன்று ஹைக்கூ வரையில் அனைவராலும் நேர்மறையாக மட்டுமின்றி… எதிர்மறையாகவும் விமர்சனம் எழுவதென்பது வாடிக்கையே.
ஒட்டக்கூத்தன் பாடலுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என மரபுக் கவிதைக்கே இம் மண்ணில் எதிர்ப்புகளும்.. விமர்சனங்களும் எழும் போது இன்றையக் காலக் கட்டத்தில் ஹைக்கூவும் அது போன்ற விமர்சனங்களை சந்தித்தே வருகிறது.
மரபு மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்… ஆங்கிலக் கவிஞர் #வால்ட்_விட்மன் ஆங்கில மொழியில் புதுக்கவிதை ( New Verse ) எனும் புதுவகை ஒன்றை புல்லின் இதழ்கள் ( Leaves of Grass ) என்ற தனது முதல் படைப்பின் வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார்.. பின் பலர் அதை வரவேற்று எழுதத் துவங்க D.S. எலியட் அவர்கள் எழுதிய பாழ் நிலம் ( Waste Land ) எனும் புதுக்கவிதை நூல் நோபல் பரிசை தட்டிச் சென்றது.. ஆங்கிலத்தில் புதுக்கவிதைகளை விடுதலைக் கவிதை ( Free Verse ) என்கின்றனர்.. மரபின் கட்டுப்பாடின்றி வருகிறதல்லவா.. நம் தமிழில் புதுக்கவிதையை அறிமுகப் படுத்தியப் பெருமை கவிஞர் ந.பிச்சமூர்த்தி அவர்களையே சேரும்.
அதன்பின் இன்று பரவலாக பலரால் விருப்பப்பட்டு வாசிக்கக் கூடிய அனைவரையும் வசிகரித்துள்ள ஒரு கவிதை வடிவம் ஹைக்கூ என்றால்.. அது மிகையில்லை.. பலரும் எழுத விரும்பும் கவிதை வடிவமாகவும் இது விளங்குகிறது..காரணம் எளிமை.. புதுமை..வாசகனை தன்னோடு இணைந்து ஈர்த்துச் செல்லும் விதம்..இயற்கையை இயற்கையோடு இயைந்து பாடப்படும் உன்னதம்.. கவிதைகளுக்கே உரிய எந்தவித ஒப்பனைகளும் இல்லாது உள்ளதை உள்ளபடி காட்டி நகர்ந்து செல்லும் தன்மை… இவையெல்லாம் ஹைக்கூவினை அனைவரும் விரும்பும் ஒரு கவிதை வடிவமாகச் செய்திருக்கிறது.
ஹைக்கூவில்… உணர்ச்சிகளை நேரடியாக பிரதிபலித்தல் கூடாது.. ஆனால் அவைகளை குறியீடுகள் வாயிலாக வெளிக் காட்டும் உத்தியை முன்னர் கவிஞர்கள் கையாண்டனர்..கவிதையில் சொற்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் நிறுத்தற் குறியீடுகளால் வெளியிடுவர்.
இதை கவனியுங்கள்..
அத்தனையும் தின்று விட்டேன்
ஆ..வயிற்று வலி
திருடிய ஆப்பிள்கள்.
- ஷிகி.
எனக்கு வயசாகக் கூடாது
சே..கேட்பீர்களா, அதோ
புது வருட மணியோசை.
- ஜோகுன்
இதே போல் நானும் எழுதி உள்ளேன் முன்னர்..
வாசலிலே பூத்தூவாலை
வரிவரியாய் கோலம்.
ஓ.. மார்கழியா இது..!
ஹைக்கூவின் முதலடியானது..சாட்டையைக் கையில் எடுக்கும் அமைதியுடனும்.. இரண்டாவது அடியானது.. அதை ஒங்கும் நிதானத்துடனும்.. மூன்றாவது அடியானது .. அதை சுழற்றி வீசிய கனத்துடனும் தெறிப்பாக அமைய வேண்டுமென ஹைக்கூ கவிஞரும்..கட்டுரையாளரும்..சிறந்த ஹைக்கூ மொழிபெயர்ப்பாளருமான நெல்லை.சு.முத்து கூறுவார்.
1 Comment
ஹ.ரெங்கபார்வதி · நவம்பர் 27, 2019 at 18 h 17 min
வளவள இல்லாமல், சுருங்கச் சொல்லி மனதில் ஆனி அடித்தாற் போல் பதிய வைப்பது, ஹைக்கூ.