தொடர் 14
ஹைக்கூவில் தனித்த வார்த்தைகள்
ஹைக்கூ எழுதும் போது தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு ஹைக்கூ எழுதக் கூடாது எனச்சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
ஆனால் தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு கவிதை எழுதலாம். தவறில்லை. இது குறித்து எந்த விதியும் வகுக்கப் படவுமில்லை. எங்கும் சொல்லப்படவுமில்லை.
இணைப்பு வார்த்தைகள் சமயத்தில் சிந்தனையை விரிவு படுத்தவும். பல கோணத்தில் சிந்திக்க வைப்பதை போலவே தனித்த சொற்களும் சமயத்தில் வலிமையான கருத்தினைச் சொல்லும். இதை கவனியுங்கள்..
தேர்தல் வந்துவிட்டது
அலங்கார தேவதைகளாய்
சுவர்கள்..!
இது எனது கவிதை. ஈற்றடியில் ஒற்றைச் சொல் பிரயோகம் செய்துள்ளேன். இதை வாசித்த நண்பர் ஒருவர் ஈற்றடியில் இரு சொல் பிரயோகம் செய்யலாமே என்றார்.
ஆனால் கவனியுங்கள். சுவர்கள் எனச் சொல்லி நிறுத்தும் போது அங்கு அது வீட்டுச் சுவராக, அலுவலகச் சுவராக, பள்ளிச்சுவராக, கோவில், மசூதி, சர்ச் போன்ற ஏதோ ஒன்றின் சுவராக இருக்க வாய்ப்புள்ளது. நான் வீட்டுச் சுவர் என “இருசொல்” வருமாறு சொல்லி நிறுத்தினால்… வாசகனது எண்ணம் வீட்டுச் சுவரோடு முற்று பெற்று விடும் அபாயமுள்ளது. எனவே கவிதையில் கூட்டுச் சொல்லோ, தனிச் சொல்லோ, எதுவும் வரலாம். கவிதைக்கு எது தேவை என்பதை கவிஞன் உணர வேண்டும். எதை கவிதையில் பயன்படுத்தினால் பல கோணங்களாய் விரியுமோ… அதை அவ்விடத்தில் பயன் படுத்துவது நல்லது. ஆகவே எவரும் இதனை வலிந்து திணிக்க முயற்சிக்காதீர்கள்.
இங்குள்ள கவிதைகள்… ஒரு சொல் பிரயோகத்தில் வந்தவை. இன்னும் பலவும் உண்டு…
இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்.
- கவிக்கோ. அப்துல் ரகுமான். (பால்வீதி)
தூண்டிலில்
சிக்கி விட்டது மீன்
கலங்குகிறது குளம்.
- ஓவியக் கவிஞர் அமுதபாரதி
இலைகளுக்குள்
மறையும் நிலா
அசையவேயில்லை மரக்கிளை..!
- மு.முருகேஷ் (தலைகீழாகப் பார்க்கிறது வானம்)
நிசப்தம்
கற்களில் ஊறிவிட
பூச்சிகளின் சப்தம்.
- மட்சுவோ பாஷோ (1644-1694)
வார்த்தை தனித்தும் இருக்கலாம். இணைந்தும் இருக்கலாம். கவிதைக்கு எது அழகோ, எது கவிதையை பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறதோ அதை அங்கு கையாள்வதில் தவறில்லை.
அடுத்து ஹைக்கூவில் “ஜென்”