தொடர் 11
கவிதைக்கு அழகு கற்பனை. கற்பனையே கவிதையை சிறக்கச் செய்கிறது. கவிஞன் தனது கற்பனைத் திறத்தினை கவிதையில் ஏற்றிக் கூறும் போது… வாசகனும் அந்த அழகிய உத்தியில் மெய்மறந்து ரசிக்கிறான். ஒன்றை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவதோ, ஒன்றின் அழகை பன்மடங்கு உயர்த்திக் கூறுவதோ கற்பனையின் உச்சமாகிறது.
ஆனால் ஹைக்கூவில் கற்பனைக்கு இடமில்லை என்கிறோம். ஆனாலும் துவக்கத்தில் ஹைக்கூவிலும் கற்பனை இல்லாமல் இல்லை. இந்த கவிதையை கவனியுங்கள்..
நிலவிற்கு ஒரு
கைப்பிடி வைத்தால்
எத்துனை அழகான கைவிசிறி.
- சோகன் (1465 – 1549) ஹைக்கூ முன்னோடிக் கவிஞர்.
பௌர்ணமி நிலவு கவிஞனின் பார்வையில் பட்டதும், அவனது நினைவு ஆஹா… அதற்கு ஒரு கைப்பிடி இருக்குமானால் தங்கநிறத்தில் ஒரு விசிறியாய் எவ்வளவு அழகாய் இருக்கும்.. என கவிஞனின் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது.
சோகன் மட்டுமல்ல இன்னும் பலரும் ஹைக்கூவில் கற்பனையை கையாண்டிருக்கிறார்கள்.
அந்த தோட்டம்
பனித்துளிக்குள் உள்ளது
தனித்த வண்ணத்துப்பூச்சி வருகிறது.
- H.Blyth.
மேற்கத்திய மிகச் சிறந்த ஹைக்கூ கவிஞர் மற்றும் கட்டுரையாளர் இவர்.
தோட்டத்தில் உள்ள புல்லின் நுனியில் உருண்டு காட்சியளிக்கும் பனித்துகளில் அந்த தோட்டமே தெரிகிறது எனக் காட்சிப் படுத்துகிறார்..மெலிதான கற்பனை இங்கு இழையோடுவதை காணலாம்.. இதையும் கவனியுங்கள்…
முழு நிலவு
காற்றோடு பாடுகிறது
காலி பாட்டில் ஒன்று.
- Ben Moeller ( USA )
பருத்திப் பூக்கள்
வானில் மலர்கிறது
மேக ஓவியம்.
- Pravat Kumar Padhy ( India )
பூமியிலே
தங்கிவிட்டார் கடவுள்
நிலவில் முதல் மனிதன்.
- மு.முருகேஷ்.
தேநீர் குவளையின் மீது
பதிந்த ரேகைகளில்
ஒரு குரல்.
- பா.மீனாட்சி சுந்தரம்
மழையில் சாய்ந்த பயிர்கள்
தோள்தொட்டு எழுப்பும்
சூரியக் கதிர்கள்.
- மு.முருகேஷ்
மெல்லிய ஓடை
உச்சியிலிருந்து தொடர்கிறது
இரட்டைப் பின்னல்.
- சாரதா க.சந்தோஷ்
மேற்கண்ட கவிதைகள் கற்பனையின் வெளிப்பாட்டில் விழைந்த ஹைக்கூக்கள்..கற்பனையும் அழகியலோடு இருப்பின் ஹைக்கூ ஏற்றுக் கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது..கற்பனையை அன்று முதல் இன்று வரை உள்ள ஹைக்கூ கவிஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவே செய்திருக்கிறார்கள். நானும் கூட பயன்படுத்தியிருக்கிறேன் இப்படி..
எந்தக் கிழவி
துப்பிய வெற்றிலை எச்சில்
கீழ்வானம் சிவப்பாய்..!
கொலுசு மின்னிதழில் வெளியான கவிதை. ஆனாலும் …
கற்பனையை பயன்படுத்த வேண்டாமென ஹைக்கூ வலியுறுத்துகிறது.. அது ஏன்.. எவரது காலத்தில் அந்த நடைமுறை வந்தது என அடுத்த பகுதியில் பார்க்கலாம்.