தொடர் 11

கவிதைக்கு அழகு கற்பனை. கற்பனையே கவிதையை சிறக்கச் செய்கிறது. கவிஞன் தனது கற்பனைத் திறத்தினை கவிதையில் ஏற்றிக் கூறும் போது… வாசகனும் அந்த அழகிய உத்தியில் மெய்மறந்து ரசிக்கிறான். ஒன்றை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவதோ, ஒன்றின் அழகை பன்மடங்கு உயர்த்திக் கூறுவதோ கற்பனையின் உச்சமாகிறது.

ஆனால் ஹைக்கூவில் கற்பனைக்கு இடமில்லை என்கிறோம். ஆனாலும் துவக்கத்தில் ஹைக்கூவிலும் கற்பனை இல்லாமல் இல்லை. இந்த கவிதையை கவனியுங்கள்..

நிலவிற்கு ஒரு
கைப்பிடி வைத்தால்
எத்துனை அழகான கைவிசிறி.

  • சோகன் (1465 – 1549) ஹைக்கூ முன்னோடிக் கவிஞர்.

பௌர்ணமி நிலவு கவிஞனின் பார்வையில் பட்டதும்,  அவனது நினைவு ஆஹா… அதற்கு ஒரு கைப்பிடி இருக்குமானால் தங்கநிறத்தில் ஒரு விசிறியாய் எவ்வளவு அழகாய் இருக்கும்.. என கவிஞனின் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது.

சோகன் மட்டுமல்ல இன்னும் பலரும் ஹைக்கூவில் கற்பனையை கையாண்டிருக்கிறார்கள்.

அந்த தோட்டம்
பனித்துளிக்குள் உள்ளது
தனித்த வண்ணத்துப்பூச்சி வருகிறது.

  • H.Blyth.

மேற்கத்திய மிகச் சிறந்த ஹைக்கூ கவிஞர் மற்றும் கட்டுரையாளர் இவர்.

தோட்டத்தில் உள்ள புல்லின் நுனியில் உருண்டு காட்சியளிக்கும் பனித்துகளில் அந்த தோட்டமே தெரிகிறது எனக் காட்சிப் படுத்துகிறார்..மெலிதான கற்பனை இங்கு இழையோடுவதை காணலாம்.. இதையும் கவனியுங்கள்…

முழு நிலவு
காற்றோடு பாடுகிறது
காலி பாட்டில் ஒன்று.

  • Ben Moeller ( USA )

பருத்திப் பூக்கள்
வானில் மலர்கிறது
மேக ஓவியம்.

  • Pravat Kumar Padhy ( India )

பூமியிலே
தங்கிவிட்டார் கடவுள்
நிலவில் முதல் மனிதன்.

  • மு.முருகேஷ்.

தேநீர் குவளையின் மீது
பதிந்த ரேகைகளில்
ஒரு குரல்.

  • பா.மீனாட்சி சுந்தரம்

மழையில் சாய்ந்த பயிர்கள்
தோள்தொட்டு எழுப்பும்
சூரியக் கதிர்கள்.

  • மு.முருகேஷ்

மெல்லிய ஓடை
உச்சியிலிருந்து தொடர்கிறது
இரட்டைப் பின்னல்.

  • சாரதா க.சந்தோஷ்

மேற்கண்ட கவிதைகள் கற்பனையின் வெளிப்பாட்டில் விழைந்த ஹைக்கூக்கள்..கற்பனையும் அழகியலோடு இருப்பின் ஹைக்கூ ஏற்றுக் கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது..கற்பனையை அன்று முதல் இன்று வரை உள்ள ஹைக்கூ கவிஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவே செய்திருக்கிறார்கள். நானும் கூட பயன்படுத்தியிருக்கிறேன் இப்படி..

எந்தக் கிழவி
துப்பிய வெற்றிலை எச்சில்
கீழ்வானம் சிவப்பாய்..!

கொலுசு மின்னிதழில் வெளியான கவிதை. ஆனாலும் …

கற்பனையை பயன்படுத்த வேண்டாமென ஹைக்கூ வலியுறுத்துகிறது.. அது ஏன்.. எவரது காலத்தில் அந்த நடைமுறை வந்தது என அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

இன்னும் வரும்…

 முன் தொடர் 10


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.