பாடல் – 97
ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் – நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில்.
(இ-ள்.) ஐங்குரவர் – ஐந்து பெரியோர்களுடைய, ஆணை – கட்டளையை, மறுத்தலும் – மறுத்து நடத்தலும்; ஆர்வு உற்ற – விரும்பிய, எஞ்சாத – குறையாமல் வளர்கின்ற; நட்பினுள் – நட்புச் செய்வாரிடத்து, பொய் வழக்கும் – பொய் பேசுதலும்; நெஞ்சு அமர்ந்த (தன்னை) மனத்தால் விரும்பிய, கற்பு உடையாளை – கற்புடைய மனைவியை, துறத்தலும் – விடுதலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நல்புடை – அறத்தினது, இல்ஆளர் – இன்மையை ஆளுதலுடையாரது, தொழில் தொழில்களாம்; (எ-று.)
(க-ரை.) ஐங்குரவர் ஆணைப்படி நடவாமையும், நண்பனிடத்துப் பொய் சொல்லுதலும், கற்புடை மனைவியைத் துறத்தலும் பாவச் செய்கைகள் என்பது.
ஐங்குரவர் அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் நெஞ்சு : இடவாகு பெயர். வழக்கு : முதனிலை திரிந்த தொழிற்பெயர். துறத்தல் – முற்றிலும் நீக்கிவிடுதல்.