பாடல் – 94
நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் – பண்பில்
இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியா தார்.
(இ-ள்.) நண்பு – நட்புக்குணம், இல்லார்மாட்டு – இல்லாதவரிடத்தும், நசைக்கிழமை – அன்புரிமையை, செய்வானும் – செய்கின்றவனும்; பெண்பாலை – மனைவியை, காப்பு – காப்பதை, இகழும் – இகழுகின்ற, பேதையும் – அறிவில்லாதவனும்; பண்பு இல் – குணமில்லாத இழுக்கு ஆன – வழுவுதலான, சொல் ஆடுவானும் – சொல்லைச் சொல்பவனும், இ மூவர் – ஆகிய இம் மூவரும், ஒழுக்கம் – தமக்குரிய ஒழுக்கத்தை, கடைப்பிடியாதார் – உறுதியாகக் கொள்ளாதவராவர்; (எ-று.)
(க-ரை.) நண்பராகத் தகாதாரை நட்புச் செய்கின்றவனும் மனைவியைக் காவாதவனும், இழிமொழி பேசுகின்றவனும் நல்லொழுக்கமில்லாதவர் என்பது.
மாட்டு : ஏழனுருபு. நசைக்கிழமையாவது, நண்பர்கட்குச் செய்யவேண்டிய கடமை. இழுக்கு : முதனிலைத் தொழிற்பெயர்.