பாடல் – 93
இருளாய்க் கழியும் உலகமும் யாதும்
தெரியா துரைக்கும் வெகுள்வும் – பொருளல்ல
காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும்
பேதைமை வாழும் உயிர்க்கு.
(இ-ள்.) இருளாய் – (அறிவில்லாதவர்க்கிடமாய் அதனால்) இருட்டாய், கழியும் – நாள்கழிக்கின்ற, உலகமும் – இடமும், யாதும், (நன்மை தீமைகளில்) ஒன்றும், தெரியாது – தெரியாமல், உரைக்கும் – சொல்கின்ற, வெகுள்வும் – கோபமும்; பொருள் அல்ல – நற் பொருள் அல்லாதவற்றில், காதல் படுக்கும் – அன்புவைக்கச் செய்யும், விழைவும் – விருப்பமும், இவை மூன்றும் – ஆகிய இம் மூன்றும், வாழும் உயிர்க்கு – உடலோடு கூடி வாழ்கின்ற உயிர்கட்கு, பேதைமை – அறியாமையைத் தருவனவாம்; (எ-று.)
(க-ரை.) அறிவில்லாதவர் இருக்கும் இடமும், நன்மை தீமை தெரியாது கோபித்துரைப்பதும், தீயவற்றில் செல்லும் விருப்பமும் மேன்மேலும் அறியாமைக்கு ஏதுவாகிய காரியங்களாம் என்பது.
இருள் : அறியாமைக்கு உவமையாகுபெயர். இடத்தின் நிகழும் உயிர்களின் தன்மையை அவ்விடத்தின்மே லேற்றி இலக்கணையால் இருளாய்க் கழியும் உலகம் என்றார். அல்ல : பண்படியாகப் பிறந்த பெயர்.