பாடல் – 89
அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.
(இ-ள்.) அருளினை – அருளை, நெஞ்சத்து – மனத்திடத்து, அடை கொடா தானும் – நிறைத்து வையாதவனும்; பொருளினை – செல்வத்தை, துவ்வான் – (தானும்) நுகராது, புதைத்து – (பிறர்க்குங் கொடாமல்) பூமியில் மறைத்து, வைப்பானும் – வைக்கின்றவனும், இறந்து – தன்னிலை – கடந்து, இன்னா – பிறர்க்குத் துன்பங்தருஞ் சொற்களை, சொல்லகிற்பானும் – சொல்லவல்லவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், பிறந்தும் – மக்கட் பிறப்பிற் பிறந்திருந்தும், பிறந்து இலதார் – பிறவாதவராவர்; (எ-று.)
(க-ரை.) அருளில்லாதவனும், பொருளை வீணாய்ப் புதைத்து வைக்கின்றவனும், பிறர்க்கு மனம் மிகவும் வருந்தும்படி பேசுகின்றவனும் மக்கட் பிறப்பைச் சார்ந்தவராகக் கருதப்படார் என்பது.
அடை – அடைக்கப்படுவது, துவ்வான் : முற்றெச்சம்; து : முதனிலை, இறந்து – கடந்து : இற – கட. இறந்து இன்னா சொல்லகிற்பான் என்பதற்குத் தன் பகைவன் இறக்க அதன் பின்னும் தீய சொல் சொல்லவல்லவன் என்றுரைத்தலுமாம்.