பாடல் – 90
ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை – யாதும்
அருள் புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்
இருளுலகம் சேராத ஆறு.
(இ-ள்.) பொருளை – செல்வத்தை, ஈதற்கு – பிறருக்குக் கொடுக்கும் பொருட்டு, செய்க – தேடக்கடவன்; அறம்நெறி – அறத்தின் வழியில், சேர்தற்கு – சேரும் பொருட்டு, பெரும் நூலைச் செய்க – பெருமையாகிய நூற்பொருளைக் கற்கக் கடவன்; யாதும் சொல்லை – எத்தன்மைத்தாகிய சொல்லையும், அருள் புரிந்து – அருளை விரும்பி, சொல்லுக – சொல்லக் கடவன்; இமூன்றும் -ஆகிய இம் மூன்றும், இருள் உலகம் – நகர உலகை, சேராத ஆறு – சேராமைக்குக் காரணமாகிய வழிகளாம்; (எ-று.)
(க-ரை.) அறஞ் செயற்காகப் பொருளையும், அறநெறியிலொழுகுவதற்காகப் படிப்பையும், அருள் விளங்கும்படி பேச்சையும் ஒருவர் கொள்ளவேண்டுமென்பது.
ஈதற்கு : கு, பொருட்டுப் பொருள். நூலைச் செயல் என்பது இங்குத் தகுதியால் கற்பதன்மேற் கூறப்பட்டது. யாதும் : உம் உயர்வு சிறப்பு. யாதும் என்பதன் உம்மையைச் சொல்லை யென்பதனோடு கூட்டுக.