பாடல் – 88
பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்
தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்
பிணைசெல்வ மாண்பின் றியங்கலிவை மூன்றும்
புணையின் நிலைகலக்கும் ஆறு.
(இ-ள்.) பிணி – நோயானது, தன்னை – , தின்னுங்கால் – வருத்தும்போது, தான் வருந்தும் ஆறும் – (ஒருவன்) தான் (அதற்கு) வருத்தப்படும் வகையும்; பெருங்கூற்று – பெரிய எமன் உயிர் உண்ணும் ஆறும் – உயிரைக் கொண்டுபோக வருத்தும் வகையும்; பிணை – (சுற்றத்தோர் முதலியோர்) வந்து சேர்வதற்குக் காரணமாகிய, செல்வம் – செல்வமானது, மாண்பு இன்று – நிலையில்லாமல், இயங்கல் ஆறும் – செல்லும் வகையும்; இவைமூன்றும் – ஆகிய இம் மூன்றும், புணையின் – (ஒருவனுக்குப் பிறவிப் பெருங்கடற்கு) மரக்கலமாயுள்ள மனத்தின், நிலை – நிலையை, கலக்கும் – கலக்குகின்ற, ஆறு – வழிகளாம்; (எ-று.)
(க-ரை.) நோயால் வருந்துவதும், உயிர்போக நோவதும் செல்வம் அழிவதும் மனவுறுதியைக் கலக்குவன என்பது.
பிணி : கருத்தாப் பொருள் உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்ட தொழிற்பெயர். மாண்பு – நிலைமை. இயங்கல் என்பதன் இறுதியில் உம் தொக்கது, ஆறு என்பதை இயங்கலோடும் கூட்டுக.