பாடல் – 82
சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் – பாய்ந்தெழுந்து
கொள்ளாருட் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்
நல்லான் வழங்கும் நெறி.
(இ-ள்.) சான்றாருள் – (நற்குணங்களால்) நிறைந்தவரிடத்தில் சான்றான் எனப்படுதல் – நற்குணங்களால் நிறைந்தவன் என்று கருதப்பட நடத்தலும்; எஞ்ஞான்றும் – செல்வம் உற்ற காலத்தும் அற்ற காலத்தும், தோய்ந்தாருள் – (ஒருதன்மையராய்) நட்புக் கொண்டு கலந்தவரிடத்து, தோய்ந்தான் – நட்புக்கொண்டு கலந்தவன், எனப்படுதல் – என்று கருதப்பட நடத்தலும்; பாய்ந்து எழுந்து – (தம்மேல் கோபத்தோடு) பாய்ந்தெழுந்து, கொள்ளாருள் – தமது நற்சொல்லை ஏற்றுக்கொள்ளாதவரிடத்து, கொள்ளாத – அவர் ஒப்புக்கொள்ளாத சொற்களை, கூறாமை – சொல்லாதிருத்தலும்; இ மூன்றும் ஆகிய இம்மூன்றும், நல் ஆள் – யாவருக்கும் நல்லவனாந் தன்மையை ஆளுவோன், வழங்கும் – மேற்கொள்ளும், நெறி – நெறியாம்; (எ-று.)
(க-ரை.) நல்லாருள் நல்லா ரெனப்படுதலும், நண்பரொடு நட்புக்கொள்ள வல்லா ரெனப்படுதலும், தன்பேச்சுச் செல்லா இடத்திற் செல்லாதிருத்தலும் நல்லவர் குணம் என்பது. கொள்ளாத : பலவின்பால் வினையாலணையும் பெயர், உள் உருபு மூன்றனுள் முன்னிரண்டும் உருபு மயக்கம். ஆள் : தொழிலாகு பெயர்.