பாடல் – 81
தோள்வழங்கி வாழும் துறைபோற் கணிகையும்
நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்
ஆசைக் கடலுளாழ் வார்.
(இ-ள்.) துறைபோல் – (பலருக்கும் பொதுவாய் நின்று தன்னிடத்து நீரைக் கொடுக்கும்) துறையினைப் போல, தோள் வழங்கி – (பலருக்கும் பொதுவாய் நின்று) தனது தோளைக் கொடுத்து, வாழும் – வாழ்கின்ற, கணிகையும் – வேசையும்; நாள் – ஒவ்வொரு நாளும், கழகம் பார்க்கும் – சூதாடும் இடத்தைத் தேடி ஆடுகின்ற, நயம் இலாச் சூதனும் – நீதியில்லாத சூதாடியும்; வாசி கொண்டு – மிக்க வட்டம் வாங்கி, ஒள் பொருள் – ஒள்ளிய பொருளை, செய்வானும் – தேடுவானும், இ மூவர் – ஆகிய இந்த மூவரும், ஆசைக் கடலுள் – ஆசையாகிய கடலில், ஆழ்வார் – அழுந்துவராவர், (எ-று.)
(க-ரை.) பொருட் பெண்டிர் ஆகிய வேசையும், சூதாடியும், மிகுந்த வட்டி வாங்கிப் பொருள் ஈட்டுவானும் பேராசை பிடித்தவர் என்பது.
ஆசைக்கு முடிவில்லை யாதலால் அதனைக் கடலென உருவகித்துள்ளார்; கணிகைத்துறை போலுதலாவது வேண்டினார் யாரும் அடைந்து இன்பங்கொள்ள இசைதல். நாள் – நாளும் : உம் : முற்றுப் பொருள்; தொக்கது. வாசி – வட்டம், வட்டி : திசைச்சொல்.