பாடல் – 63
நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும்
ஈர்வளையை யில்லத் திருத்தலும் – சீர்பயவாத்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.
(இ-ள்.) நோ – (தமக்கு வரும்) துன்பத்துக்கு, அஞ்சாதாரோடு – பயப்படாதவரிடத்து, நட்பும் – கொண்ட நட்பும்; விருந்து அஞ்சும் – விருந்தினர்க்கு உண்டி கொடுக்க அஞ்சுகின்ற, ஈர்வளையை – மனைவியை, இல்லத்து – மனையினிடத்தில், இருத்தலும் – இருக்கச் செய்தலும் : சீர்பயவா – சிறப்பைத் தராத, தன்மை – தன்மையையுடைய, இல் ஆளர் – இல்வாழ்வோருக்கு, அயல் இருப்பும் – அயலில் குடியிருத்தலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நன்மை – நன்மையை, பயத்தல் இல – தருதலில் லனவாம்; (எ-று.)
(க-ரை.) வருந் துன்பத்துக்கு அஞ்சா நண்பரின் நட்பும் விருந்தோம்பாத மனைவியோடிருப்பும், நற்குணமில்லாதவர் அயலிற் குடியிருப்பும் பயனற்வை என்பது.
நோ : முதனிலை திரிந்த தொழிற்பெயர். ஈர்வளை : பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; பைந்தொடி என்னும் பொருளது. ஈர் : வினைத்தொகையாயின் அறுக்கப்பட்ட என்னும் பொருட்டு. வளை : பண்பாகு பெயர்.