பாடல் – 62
நன்றிப் பயன் தூக்கா நாணிலியும் சான்றோர்முன்
மன்றில் கொடும்பா டுரைப்பானும் – நன்றின்றி
வைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார்.
(இ-ள்.) நன்றிப்பயன் – ஒருவன் தனக்குச் செய்த நன்றியின் பயனை, தூக்கா – அளந்தறியாத, நாண் இலியும் – நாணமில்லாதவனும்; சான்றோர் முன் – பெரியவர் முன்னே, மன்றில், அறநிலையத்தில், கொடும்பாடு – பொய்ச் சொல்லை, உரைப்பானும் – சொல்லுகின்றவனும்; நன்று இன்றி – நற்செய்கை இல்லாதவனாய், வைத்த – ஒருவன் வைத்த, அடைக்கலம் – அடைக்கலப் பொருளை, கொள்வானும் – கைப்பற்றிக் கொள்பவனும்; இ மூவர் – ஆகிய இந்த மூவரும், எச்சம் இழந்து – தம் மக்களை இழந்து வருந்தி, வாழ்வார் – உயிர் வாழ்வார்; (எ-று.)
(க-ரை.) நன்றி மறந்த நாணிலியும், மன்றிற் பொய்ச் சாட்சி புகன்றவனும், அடைக்கலப் பொருளை வௌவியவனும் மக்கட்பேறற்று வருந்துவர் என்பது.
கொடும்பாடு : பண்புத்தொகை. கொடுமை – வளைவு. எச்சம் – எஞ்சுவது : தொழிற்பெயர்; ஒருவன் இறந்தபின் மிகுந்து நிற்பது மக்களும் புகழும் ஆதலால் இரண்டும் கூறலாம். நாணிலி என்பதில் இகரம் ஆண்பாலை யுணர்த்தியது வாழ்வார் : வாாழார் என உடன் பாட்டில் வந்த எதிர்மறை. அடைக்கலம் : பண்பாகுபெயர்.