பாடல் – 61
ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவ தெய்தாமை முற்காத்தல் – வைகலும்
மாறேற்கும் மன்னர் நிலையறிதல் இம்மூன்றும்
சீரேற்ற பேரமைச்சர் கோள்.
(இ-ள்.) ஐஅறிவும் – ஐம்பொறிகளின் அறிவும், தம்மை அடைய – (தீயவழியில் செல்லாது) தம்மிடத்து அடங்கி நிற்கும்படி, ஒழுகுதல் – நடத்தலும்; எய்துவது அரசனுக்கு வருவதாகிய தீங்கை, எய்தாமை – வராதபடி, முன்காத்தல் – முன் அறிந்து தடுத்தலும்; வைகலும் – நாடோறும், மாறு – (தம்முடைய) பகைமையை, ஏற்கும் – ஏற்றுக்கொள்ளுதற்குரிய, மன்னர் நிலை – அரசருடைய இருப்பை, அறிதல் – ஒற்றர்களால் அறிந்து அதற்குத் தக்கபடி செய்தல்; இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும், சீர் ஏற்ற – புகழை மேற்கொண்ட, பேர் அமைச்சர் – பெருமையாகிய அமைச்சர்களின், கோள் துணிவுகளாம்; (எ-று.)
(க-ரை.) பேரமைச்சர்கள் ஐம்பொறிகளை அடக்கி நடத்தவும், அரசனுக்குத் தீங்கு வராமல் காக்கவும், பகைவருடைய நிலைமையை அறிந்து நடக்கவும் வல்லவர்களாயிருக்க வேண்டும்.
ஐம்பொறிகள் – மெய், வாய், கண், மூக்கு, செவி, எய்துவது : எய்து என்னும் வினையினடியாகப் பிறந்த எதிர்கால வினையாலணையும் பெயர், மாறு : முதனிலைத் தொழிற் பெயர். நிலை : தொழிற்பெயர்.