பாடல் – 64
நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்
இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் – தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.
(இ-ள்.) நல் விருந்து – நன்மையான விருந்தினரை, ஓம்பலின் – பாதுகாத்தலால், நட்டாள் ஆம் – கணவனுக்கு நட்பினளாம்; வைகலும் – நாடோறும், இல் – இல்லறத்தை, புறஞ் செய்தலின் (வழுவாது) காத்தலால், ஈன்ற தாய் (ஆம்) – பெற்ற தாயாம்; தொல்குடியின் – தன் பழைய குடும்பத்துக்குரிய, மக்கள் பெறலின் – மக்களைப் பெறுதலால், மனைக்கிழத்தி (ஆம்) – மனையாளாம்; இ மூன்றும் – (விருந்தோம்பல் முதலிய) இம் மூன்று செயலும், கற்பு உடையாள் – கற்புடைய பெண், பூண்ட மேற்கொண்ட, கடன் – கடமைகளாம்; (எ-று.)
(க-ரை.) விருந்தோம்பல், மனையறம் போற்றல், மக்கட் பெறுதல் இவற்றைச் செய்யும் பெண்ணே கற்புடைய பெண் என்பது.
மனைக்கிழத்தி – மனைவி. கிழத்தி – கிழமையுடையவள். புறஞ் செய்தல் என்பதில் புறஞ்செய் ஒரு சொல். விருந்தினர்க்கு நன்மையாவது, இல்வாழ்வானால் இயன்றவளவு தந்த உண்டி முதலியவற்யை ஏற்று மகிழ்தல். ஆம் என்பதனை, தாய், கிழத்தி என்பவற்றோடுங் கூட்டுக. தொன்மை குடி – தொல் குடி. தொன்மை – பழைமை, அஃதாவது தொன்று தொட்டு வருவது.