பாடல் – 29
பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை
கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை
மண்விழைந்து வாழ்நாண் மதியாமை இம்மூன்றும்
நுண்விழைந்த நூலவர் நோக்கு.
(இ-ள்.) பெண் – ஒரு பெண், விழைந்து – விரும்பி, பின் செலினும் – பின் சென்றாலும், தன் செலவில் – தன்னடக்கையில், குன்றாமை – குறையாமையும்; கண் விழைந்து – (தன்) இடந்தேடி, கை உறினும் – வந்து கைப்பட்டாலும், பொருட்கு – (பிறன்) பொருளிடத்தே, காதல் இன்மை – ஆசையில்லாதிருத்தலும், மண் விழைந்து – (மனை முதலிய) நிலத்தை விரும்பி, வாழ்நாள் – (அறப்பயனை யடையாமல்) வாழ்கின்ற காலத்தை, மதியாமை – நல்லதென எண்ணாமையும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நுண் – நுட்பமான, நூல் – நூல்களை, விழைந்தவர் – விரும்பிக் கற்றுணர்ந்தவருடைய, நோக்கு – கருத்தாம்; (எ-று.)
(க-ரை.) முறை பிறழ்ந்து தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறன்பொருள் வலிய வந்தெய்தினும் கைக் கொள்ளாமையும், மண்ணாளுதலை விரும்பிய வாழ்நாளை மதியாமையும் நூலுணர்வுடையார் கருத்து.
விழைந்து : உகரவீற்று வினையெச்சம், பின் : இடைச்சொல், செலின் : செல்லின் என்பது லகரம் தொக்கது. செலவில், செலவு : தொழிற்பெயர். இல் : ஐந்தாம் வேற்றுமை, நீக்கப் பொருள் : ஏழாம் வேற்றுமையுமாம். குன்றாமை : எதிர் மறைத் தொழிற்பெயர். குன்று : பகுதி பின்செலினும், கையுறினும் : உம், எதிர்மறை, பொருள்களின் நுண்மையை அப் பொருள்களை யுணர்த்தும் நூலின்மே லேற்றி நுண்ணூல் என்றார். விழைந்த நூலவர் என்பதை நூல் விழைந்தவர் எனப் பின் முன்னாக நிறுத்தி விகுதி பிரித்துக் கூட்டுக. பொருட்கு என்னும் நான்கனுருபு ஏழாவதனிடப் பொருளில் வந்தது. நோக்கு : முதனிலைத் தொழிற்பெயர்; கருவிப் பொருள் விகுதிபுணர்ந்து கெட்ட பெயர் எனலுமாம்.