பாடல் – 30
தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும்
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்
என்று மழுக்கா றிகந்தானும் இம்மூவர்
நின்ற புகழுடை யார்.
(இ-ள்.) தன் நச்சி – தன்னை விரும்பி, சென்றாரை – அடைந்தவரை, எள்ளா ஒருவனும் – இகழாத ஒருவனும், மன்னிய – மிகுந்த, செல்வத்து – செல்வம் வந்த காலத்தில், பொச்சாப்பு – மறதியை, நீத்தானும் – நீக்கினவனும்; என்றும் – பிறரிடத்துப் பகைமை யுண்டாகிய காலத்திலும், அழுக்காறு – அவரது செல்வங் கண்ட இடத்து மகிழாமையை, இகந்தானும் – (கடந்தவனும்) நீங்கினவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும்; நின்ற புகழ் உடையார் – அழியாப் புகழுடையார்; (எ-று.)
(க-ரை.) தன்னை மதித்து வந்தவரை இகழாமல் ஏற்றுக் கொள்வதும், செல்வம் சிறந்த காலத்தும் நண்பர் முதலியவர்களை மறவாமல் போற்றுவதும், பிறன் வாழ்வுக்கு மகிழ்வதும் புகழுக்குக் காரணமானவை என்பது.
தன்நச்சி : இரண்டாம் வேற்றுமைத்தொகை. நச்சி – நச்சு : பகுதி. இ : வினையெச்ச விகுதி. எள்ளா – எள்ளாத : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மன்னிய : மன் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம். பொச்சாப்பு – பொச்சா : பகுதி, பு : தொழிற்பெயர் விகுதி; ப் : சந்தி – நீத்தான் : விணையாலணையும் பெயர் : நீ : பகுதி : அழுக்காறு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்; அழுக்கறு; பகுதி. இகத்தல் – கடத்தல். இக : பகுதி. நின்ற – நிலைபெற்ற.