பாடல் – 31
பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங்
கில்லற முட்டா தியற்றலும் – வல்லிதின்
தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றுங்
கேள்வியு ளெல்லாந் தலை.
(இ-ள்.) பல்லவையுள் – பல நூல்களிலும், நல்லவை – நல்ல நூற் பொருள்களை, கற்றலும் – கற்றுணர்தலும்; பாத்து – (பிரமசாரி முதலிய பதின்மர்க்குப்) பகுத்துக் கொடுத்து, உண்டு – (தானும்) உண்டு, ஆங்கு – அந்நிலையில், இல்லறம் – இல்லாளோடு கூடிச் செய்யும் அறமானது, முட்டாது – குறைவுபடாமல், இயற்றலும் – செய்தலும்; வல்லிதின் – ஊக்கத்தொடு, தாளின் – முயற்சியால், ஒரு பொருள் – செய்தற்கரிய செய்கையை, ஆக்கலும் – செய்து முடித்தலும்; இ மூன்றும் – இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் – கல்விகளெல்லாவற்றிலும், தலை – சிறந்த கல்வியாம்; (எ-று.)
(க-ரை.) கற்கத் தக்கவற்றைக் கற்றலும், இல்லறத்தை முட்டின்றிச் செய்தலும், ஊக்கத்தோடு முயற்சியால் அருஞ்செயல் ஆற்றலும் தலைசிறந்தன.
பல்லவை – பல அவை, சபையுமாம். முட்டாது : எதிர் மறை வினையெச்சம்; முட்டு : பகுதி, வல்லிது : வலிமை என்னும் பண் படியாகப் பிறந்த ஒன்றன்பால் வினையாலணையும் பெயர். தாளின் : இன் : உருபு, ஐந்தாம் வேற்றுமை, ஏதுப்பொருள், ஆக்கல்: அல் ஈற்றுத் தொழிற்பெயர். கேள்வி : தொழிற்பெயர். தொழிலாகு பெயருமாம். கேள்வியுளெல்லாம் : உருபுமாறி நின்றது : இலக்கணப் போலி.