பாடல் – 28
வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்
இல்லது காமுற் றிருப்பானுங் – கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப் பானும்இம் மூவர்
உமிக்குத்திக் கைவருந்து வார்.
(இ-ள்.) வெல்வது – சொல்வென்றியை, வேண்டி – விரும்பி, வெகுண்டு உரைக்கும் – (உண்மைப் பொருளை யுரைப்போரைச்) சினந்து சொல்கின்ற, நோன்பு இலியும் – தவம் இல்லாதவனும், (தீயோனும்,) இல்லது – (தனக்குக்) கிடைத்தற்கரிய பொருளை, காமுற்று – விரும்பி, இருப்பானும் – இருக்கின்றவனும்; கல்வி – பிறன் கற்ற கல்விப் பொருளில், செவிக் குற்றம் – செவியினால் குற்றத்தை, பார்த்திருப்பானும் – ஆராய்ந்து பார்க்கின்றவனும், இ மூவர் – ஆகிய இம் மூவரும், உமி குத்தி – உமியைக் குத்தி, கை வருந்துவார் – கைவருந்துவோரை ஒப்பர்; (எ-று.)
(க-ரை.) வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லக் கருதுதலும், கிட்டாததைப் பெற முயலுதலும், ஒருவன் கல்வியின் தன்மையை ஆராயாது குற்றங் கூறுதலும்; உமியைக் குத்துபவர் போல் துன்பத்தையும் பயனின்மையையும் கொடுக்கும் என்பது.
வெல்வது : எதிர்காலத் தொழிற்பெயர்; வெல் : பகுதி, வ் : இடைநிலை, அ : சாரியை, து : விகுதி, “வெல்வது வேண்டின் வெகுளி விடல்,” என்பது நான்மணிக்கடிகை. வெகுண்டு : இறந்தகால வினையெச்சம். வெகுள் : பகுதி, ட் : இடைநிலை, உ : விகுதி, ளகரம் ணகரமானது விகாரம். நோன்பு – உயிர்க் குறுகண் செய்யாமை. “உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற் குரு” என்றார் வள்ளுவரும். இலி – இல்லாதவன். உமிக்குத்தி : இரண்டாம் வேற்றுமைத் தொகை. ஒப்பர் என்னும் சொல் எஞ்சி நின்றது.