பாடல் – 27

உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலுந் -தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமைஇம்மூன்றுந்
தூஉய மென்பார் தொழில்.

(இ-ள்.) உண்பொழுது – உண்ணுதற்குரிய காலத்தில், நீர் ஆடி – குளித்து, உண்டலும் – உண்ணுதலும்; என் பெறினும் – (சாட்சியாகும் பொழுது) எவ்வளவு பெரும் பயனை அடைவதாயிருந்தாலும், பால் – ஒரு பக்கம், பற்றி – சார்ந்து, சொல்லா விடுதலும் – பொய்க்கரி சொல்லாமலிருத்தலும்; தோல் வற்றி – (உணவின்மையால்) உடம்பு இளைத்து, சாயினும் – அழிவதாயிருந்தாலும், சான்று ஆண்மை – பல நற்குணங்களால் நிறைந்து அவற்றை ஆளுதல், குன்றாமை – குறையாமையும்; இ மூன்றும் இவை மூன்றும், தூஉயம் – (மன மொழி மெய்களால்) குற்றமற்றவர்களாயிருக்கின்றோம், என்பார் – என்று கருதுவோர் தொழில் – செயல்களாம், (எ-று.)

(க-ரை.) நீராடி யுண்பதும், பொய்க்கரி புகலாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள்.

விதித்த காலங்களில் நீராடக் கூடாமற் போனாலும் உண்ணும் பொழுதாயினும், நீராடுதல் இன்றியமையாத தென்பது. என் : எவன் என்னும் வினாப்பெயர். சான்று – அறிவின் நிறைவு; சால் என்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த பெயர்; று : விகுதி, ஆண்மை – ஆளுதல்; தொழிற்பெயர். தோல் – உடம்பு : சினையாகு பெயர். வற்றி : வறுமை என்னும் பண்புப் பகுதி ஈறு கெட்டுப் பகுதி இரட்டித்து இகர விகுதி பெற்றது. தூஉயம் : உயிரளபெடை; இசை நிறைத்தற்கண் வந்தது. சான்றாண்மையாவது – பல குணங்களாலும் நிறைந்து அவற்றை யாடற்றன்மை. ‘ஊழி பெயரினுந் தாம் பெயரார் சான்றாண்மைக், காழி யெனப்படுவார்.’ என்ற பொய்யாமொழிக் கிணங்கித் தோல்வற்றிச் சாயினும் என்றார். பால் – பக்கம். வள்ளுவரும் “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந் தொருபாற், கோடாமை சான்றோர்க் கணி” என்று கூறியுள்ளார். இதில் ஒருபாற் கோடாமை யாவது – வினாவிடைகளாற் கேட்டவற்றை மறையாது பகை நொதுமல், நட்பென்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதல். நீராடுவதனால் அழுக்கு முதலிய உடம்பின் குற்றம்.

நீங்குதலும், பால்பற்றிச் சொல்லாமையினால் பொய் முதலிய வாய்க்குற்றம் நீங்குதலும், சான்றாண்மை குன்றாமையினால் வஞ்சனை முதலிய மனக்குற்றம் நீங்குதலும் சொல்லப்பட்டன.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »