பாடல் – 24

காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந்
தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் – மாண்டசீர்க்
காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும் அளறு.

(இ-ள்.) காண் தகு – காணுதற்குத் தக்க, மென்தோள் – மெல்லிய தோள்களையுடைய, கணிகை – வேசையின், வாய் – வாயிற் பிறக்கின்ற, இன்சொல்லும் – இனிய மொழியும்; தூண்டிலினுள் – தூண்டிலினிடத்து, பொதிந்த – (மீனுக்கு இரையாக அதன் முள்ளை மறைத்து) வைக்கப்பட்ட, தேரையும் – தவளையும் : காழ்ந்த – வயிரம் பற்றிய, பகைவர் – பகைவர்களுடைய, மாண்ட – மாட்சிமைப்பட்ட, சீர் – சீரையுடைய, வணக்கமும் – வணக்கமும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், ஆழ்ச்சிப் படுக்கும் – (உயிர்களைத் தன்னுள்ளே) அழுந்தப் பண்ணுகின்ற, அளறு – நரகம் (போல்வனவாம்); (எ-று.)

(க-ரை.) வேசியர் பேச்சும், பகைவர் வணக்கமும், வெளிக்கு நலம்போ லிருந்து உள்ளே கவடு கொண்டிருத்தலால் நலமல்ல; ஆதலால் அவற்றை நம்புதல் தூண்டிலில் வைத்த தவளையை விழுங்கப்போய், மீன் அகப்பட்டுக் கொண்டு கெடுவது போல் கெடுதியே விளைவிக்கும்.

காண்தகு – காண்டகு, காண் : முதனிலைத் தொழிற்பெயர், நான்கனுருபு தொக்கதாகக் கொண்டு, காணுதற்கு என்று பொருள் சொல்லப்பட்டது. கணிகை – கணிக்கின்ற தன்மையிலிருப்பவள். அஃதாவது “செக்கூர்ந்து கொண்டாருஞ் சேர்ந்த பொருளுடையார், அக்காரம் அன்னார் அவர்க்கு” என்ற நாலடிச் செய்யுட்படி எவன் மிக்க பொருள் தருபவனென்று சிந்திக்கின்றவன் என்பதாம், வாய் என்று வேண்டாது கூறியது, பொருளுடையாரிடத்துக் கடுஞ்சொல் பயிலாமையைக் குறிக்கவேண்டியாம். தூண்டில் : தொழிலாகு பெயர் மீன்களை விரும்பத் தூண்டுவது. இனி, இல் : கருத்தாப் பொருள் விகுதியாகவுங் குறிக்கலாம். ஆழ்ச்சி – ஆழுதல் : தொழிற் பெயர். காழ்த்த : காழ் என்னும் பெயரடியாகப் பிறந்த இறந்த காலப் பெயரெச்சம். நரகம் போலுதலாவது அழிதற் கேதுவாய துன்பம் தருவது.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »