பாடல் – 24
காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந்
தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் – மாண்டசீர்க்
காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும் அளறு.
(இ-ள்.) காண் தகு – காணுதற்குத் தக்க, மென்தோள் – மெல்லிய தோள்களையுடைய, கணிகை – வேசையின், வாய் – வாயிற் பிறக்கின்ற, இன்சொல்லும் – இனிய மொழியும்; தூண்டிலினுள் – தூண்டிலினிடத்து, பொதிந்த – (மீனுக்கு இரையாக அதன் முள்ளை மறைத்து) வைக்கப்பட்ட, தேரையும் – தவளையும் : காழ்ந்த – வயிரம் பற்றிய, பகைவர் – பகைவர்களுடைய, மாண்ட – மாட்சிமைப்பட்ட, சீர் – சீரையுடைய, வணக்கமும் – வணக்கமும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், ஆழ்ச்சிப் படுக்கும் – (உயிர்களைத் தன்னுள்ளே) அழுந்தப் பண்ணுகின்ற, அளறு – நரகம் (போல்வனவாம்); (எ-று.)
(க-ரை.) வேசியர் பேச்சும், பகைவர் வணக்கமும், வெளிக்கு நலம்போ லிருந்து உள்ளே கவடு கொண்டிருத்தலால் நலமல்ல; ஆதலால் அவற்றை நம்புதல் தூண்டிலில் வைத்த தவளையை விழுங்கப்போய், மீன் அகப்பட்டுக் கொண்டு கெடுவது போல் கெடுதியே விளைவிக்கும்.
காண்தகு – காண்டகு, காண் : முதனிலைத் தொழிற்பெயர், நான்கனுருபு தொக்கதாகக் கொண்டு, காணுதற்கு என்று பொருள் சொல்லப்பட்டது. கணிகை – கணிக்கின்ற தன்மையிலிருப்பவள். அஃதாவது “செக்கூர்ந்து கொண்டாருஞ் சேர்ந்த பொருளுடையார், அக்காரம் அன்னார் அவர்க்கு” என்ற நாலடிச் செய்யுட்படி எவன் மிக்க பொருள் தருபவனென்று சிந்திக்கின்றவன் என்பதாம், வாய் என்று வேண்டாது கூறியது, பொருளுடையாரிடத்துக் கடுஞ்சொல் பயிலாமையைக் குறிக்கவேண்டியாம். தூண்டில் : தொழிலாகு பெயர் மீன்களை விரும்பத் தூண்டுவது. இனி, இல் : கருத்தாப் பொருள் விகுதியாகவுங் குறிக்கலாம். ஆழ்ச்சி – ஆழுதல் : தொழிற் பெயர். காழ்த்த : காழ் என்னும் பெயரடியாகப் பிறந்த இறந்த காலப் பெயரெச்சம். நரகம் போலுதலாவது அழிதற் கேதுவாய துன்பம் தருவது.