பாடல் – 23
தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார்
குற்றங் கடிந்த வொழுக்கமுந் – தெற்றெனப்
பல்பொரு ணீங்கிய சிந்தையும் இம்மூன்றும்
நல்வினை யார்க்குங் கயிறு.
(இ-ள்.) தானம் – தானத்தை, கொடுக்கும் – கொடுக்கின்ற, தகைமையும் – பெருஞ் செய்கையும்; மானத்தார் – பழிக்கு நாணுதலுடையாரது, குற்றம் கடிந்த – குற்றத்தை நீக்கிய ஒழுக்கமும் – நல்லொழுக்கமும்; தெள்றென – தெளிய (உண்மையாக), பல் பொருள் பல விடயங்களினின்றும், நீங்கிய – ஒழிந்த சிந்தையும் – எண்ணமும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நல்வினை – அறத்தினை பயனை, ஆர்க்கும் – (நீங்காதபடி) கட்டுகின்ற, கயிறு – கயிறாம், (எ-று.)
(க-ரை.) தானங் கொடுத்தலாலும், மானங் கெடாத நல்லொழுக்கத்தாலும், பொருள் மேலே சிந்தனை யொழிந்திருப்பதனாலும் நல்வினைகளே மேன்மேலும் செய்யலாம்.
தானம் – அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடுங் கொடுத்தல். தகைமை : பண்புப் பெயர். பொருள் நீங்கிய : பொருளின் நீங்கிய என்று ஐந்தனுருபு விரிக்க. வினையென்னும் காரணப் பெயர் தன் காரியமாகிய பயன்மேல் நின்றது. ஆர்க்கும் : எதிர்காலப் பெயரெச்சம்; ஆர் : பகுதி, உம் : விகுதி, கு : சாரியை, க் : சந்தி, குற்றம் : பண்புப் பெயர். கடிந்த : பெயரெச்சம்; கடி என்னும் உரிச்சொல் பகுதி.