பாடல் – 05
வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப
விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வும் – உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும்
அருந்துயரம் காட்டு நெறி.
(பொருள்) :
வழங்கா – யாவரும் இறங்கப் பாராத, துறை இழிந்து – துறையில் இறங்கி, நீர் போக்கும் – பெரும் நீரில் போதலும், ஒப்ப – தனக்கு ஒப்பாக, விழைவு இல்லா – விருப்பமில்லாத, பெண்டீர் தோள் – வேசையர் தோளை, சேர்வு – சேர்தலும், உழந்து – வருந்த, விருந்தினனாய் – பிறர்க்கு விருந்தாளியாகி, வேற்றூர் – அயலூரில், புகலும் – புகுதலும், இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், அரும் – (ஒருவனுக்கு) அரிய, துயரம் – துன்பத்தை, காட்டும் நெறி – காட்டும் வழியாம்; (எ-று.)
(கருத்து) :
ஆறு முதலியவற்றிற் பழகாத துறையில் இறங்கிச் செல்லுதலும், தன்மேற் பற்றில்லாதவளைச் சேர்தலும், வயிற்றை நிரப்பும்பொருட்டு அடுத்த ஊர் செல்லுதலும் இன்பமன்றித் துன்பத்தையே செய்யும்.
வழங்காத் துறை – வழங்காத துறை, வழங்கா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். போக்கு – போதல் : தொழிற்பெயர், ஒப்ப : செயவென் வாய்பாட்டு வினையெச்சம், ஓ : பகுதி, விழைவு : தொழிற்பெயர், இல்லா – இல்லாத – இல்லாத : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பெண்டீர் – குலமாதர் அல்லாத வேசையர், பெண்டு+ஈர் : பல்லோர் படர்க்கைப் பெயர்.