தொடர் – 44
ஹைக்கூவில் பாஷோவின் ஆளுமை
பாஷோ.. ஹைக்கூவின் பிதாமகர்.. ஜப்பானியக் கவிஞர் கி.பி.1644_ ல் பிறந்து 1694 ல் மறைந்த ஒரு மாபெரும் ஹைக்கூ ஆசான்.
பாஷோ என்பதற்கு ஜப்பான் மொழியில் வாழை மரம் என்று பொருள்..அவரும் வாழை மரத்தைப் போன்றே பலவித பயன்களை (விசயங்களை) ஹைக்கூ கவிஞர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்..
இன்றைய பல ஹைக்கூ கவிஞர்களுக்கு பாஷோ ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் எனில் அது மிகையன்று.. ரென்கா.. ஹைக்கூ..ஹைபுன் போன்ற பலவகைமை கவிதைகளில் அவர் சிறந்த ஆசானுமாவார்.
நாம் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாய் பிறக்கிறது..நேற்று போல் இன்று இருப்பதில்லை..இன்று போல் நாளை அமையுமா எனில்..அதுவும் உறுதியாய் சொல்ல இயலாது…வாழ்வில் ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு புது அனுபவத்தை..புது விசயமொன்றை கற்றுத் தந்தே நகர்கிறது.
எதைப் போலவும் இல்லை
இதனை ஒப்பிட முடியாது
இந்தக் கோடை நிலவு.
பாஷோ பல கோடை நிலவுகளை கண்டிருக்கலாம்..ஆனால் இன்று அவர் காணும் அந்த நிலவு மற்ற கோடை நிலவினைப் போலில்லை..என்னவோ..ஏதோ நிகழ்ந்திருக்கிறது அவருக்குள்..இந்த கோடை நிலவு அவருக்குள் ஒரு புதிய அனுபவத்தை தந்திருக்க கூடும்..இதை கண்டவுடன் எனக்குள் தமிழ் பட பாடல் பலவும் நினைவுக்கு வருகிறது..
**அன்று வந்தது இதே நிலா..
**அன்றொரு நாள் அதே நிலவில் அவர் இருந்தார் என்னருகிலே..
இன்னும் பல பாடல்கள்..நிலவு கவிஞர்களுக்குள் பேதமின்றி விதைத்து விட்டுப் போகிறது ஏதாவது நினைவலைகளை.
பாஷோவின் இறுதி காலத்தில் அவர் கடைசியாய் பாடிய ஹைக்கூ கவிதை இது..
பயணத்தில் நோய்
என் கனவு அங்குமிங்கும் அலைகிறது
வறண்ட வயல்கள் மீது.
நிலையாய் ஓரிடத்தில் வாழாமல்..அங்குமிங்கும் அலையும் தேசாந்திரியே பாஷோ.. அவரைப் போலவே அவரது கனவும் அலைந்து திரிவதாக சொல்லியிருக்கிறார்.. வறண்ட வயல் என்பது அன்றைய நாளில் அவர் வாழ்ந்த மண் பழைமைவாதிகளால் சூழப்பட்டு பாழ்பட்டு நிற்கும் பூமியை குறிப்பதாக கூட இருக்கலாம்..தான் வாழும் மண்ணின் எதிர் கால நிலையை எண்ணி அவர் கனவு காண்பதாகவும் கொள்ளலாம்.
ஹைக்கூ கவிஞர்கள் சிறப்பான கவிதையை வடிக்க ஆண்டுக் கணக்கில் தவமிருக்கலாம்..ஒரு சிறப்பான கவிதையை வாழ்நாளில் வடித்தாலும் அவன் ஹைக்கூ கவிஞனே..
அக்கவிஞனிடத்தில் இருந்து பலச் சிறப்பான கவிதைகள் பிறக்குமெனில் அவன் ஹைக்கூ ஆசான் ஆவான் என சொல்லிச் சென்றவர் பாஷோ..
ஒரு கவிதை எழுதினாலே போதும்..ஒரு ஹைக்கூ கவிஞனாகி விடலாம் எனில் அந்த ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் என… நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.