தொடர் – 34
சாயலும்… போலச்செய்தலும்..
இன்று முகநூல் ஹைக்கூ உலகில் அனைவரிடமும் உலவும் வார்த்தைகள் இவ்விரண்டும்.
சாயல் கவிதை என்பது. ஒருவர் எழுதிய கவிதையின் சாயலில் தெரிந்தோ… தெரியாமலோ வேறு ஒரு கவிஞர் அதே சிந்தனையில் கவிதை வடிப்பது… இங்கு
இந்நிகழ்வானது அறிந்தும் நடக்கலாம். அறியாமலும் நடக்கலாம். இதை தவறு எனக் கூறுவதற்கில்லை. ஏனெனில் ஒரு கவிஞன் காணும் காட்சியை வேறு ஒரு கவிஞன் காணமாட்டான் என எவ்வாறு எண்ணுதல் இயலும். அதுமட்டுமல்ல ஒருவரது சிந்தனை அடுத்தவருக்கும் வரும். என்பதும் ஏற்புடையதே..
இவ்விடத்தில் கவிஞர்களிடத்திலிருந்து பிறக்கும் வார்த்தைகளை கவனித்தாலே தெரிந்து விடும். ஒவ்வொருவரும் தாங்கள் அறிந்து உணர்ந்ததை கவிதையாகப் பதிவிட்டிருக்கிறார்கள் என்பது புரிந்து விடும்.
இந்த கவிதைகளை காணுங்கள்…
மேய்கின்ற மாட்டின் மேல்
ஒய்யாரமாய் ஒரு பயணம்.
வெள்ளை நாரை.
- அனுராஜ்..
இது எனது கவிதை.
முகநூலில் பதிவிட்ட மறுதினம் ஒரு கவிஞர் எனது முகநூல் பக்கத்தில் வந்து.. ஐயா.. . நான் இது போல ஒன்று எழுதியிருக்கிறேன் என்றார். ஒரு மாத இதழுக்காக நான் பற்றியத்தில் ( மெசன்ஜர் ) எழுதி அனுப்பி வைத்த கவிதையை ஒத்து இருக்கிறது. ஆனால் நான் முகநூலில் பதிவிடவில்லை என்றார்.நான் அவரது கவிதையை பதிவிடக் கூறிய பின்.. அவர் பதிவிட்டது இக்கவிதை…
வெள்ளைக் கொக்கு
இடமாறிப் போகிறது
மாட்டின் மேல் அமர்ந்து.
- குமார் சேகரன்.
சற்றேறக்குறைய ஒரே சிந்தனை இருவரது கவிதைக்குள்ளும். இங்கு நான் அவர் கவிதையைப் பார்த்து எழுதவில்லை. அவரது மெசன்ஜர். பகுதியை நான் எப்படி கவனிக்க இயலும். அவரே சொல்லிவிட்டார். நான் எங்கும் பதிவிட வில்லையென. இது தற்செயலாக நடந்த நிகழ்வு இருவருக்குள்ளும்.
கிராமப் புறங்களில் இது போன்று மாடுகள், ..எருமைகளின் மேல் கொக்கு..நாரை மற்றும் பறவைகள் அமர்ந்து செல்வது வாடிக்கையான நிகழ்வு தான்.
அவரது சிந்தனையே… எனக்குள்ளும் ..இது தவறும் ஆகாது..
இதே சிந்தனை…
கரிச்சான் குருவியின்
முதுகு சவாரியை ஏற்கிறது
செம்மறியாடு.
- எஸ். நாகலிங்கம்.
இவ்வாறும் பிறப்பெடுக்கும்.. இதுவும் அது போன்ற ஒரு சாயல் தான் என்பதை மறுப்பதற்கில்லை.. எனவே…
சாயல் கவிதைகளை கண்ணுறும் போது கடந்து சென்று விடுவது நல்லது. தெரிந்து நடக்கிறது எனில், இங்கு நமது கவிதை வேறொரு உருவத்தில் மறுபிறவி எடுத்திருக்கும்.
இது.. நமது கவிதை அவர்களது உள்மனதைக் கவர்ந்துள்ளது என்பதே பொருள்.. தெரியாமல் நடக்கிறதெனில் ஒருவருக்கான சிந்தனை…
அடுத்தவருக்கும் வரலாம்..என்பதே..
இனி… அடுத்தது… போலச்செய்தல் (காப்பி).
போலச்செய்தல் என்பது அப்படியே நமது படைப்பை எந்த சொற்களையும் மாற்றாமல் எழுதி நமது பெயருக்கு பதிலாய் வேறொருவரின் பெயரை ( தன் ) பெயரை போட்டுக் கொள்ளுதல் ..போலச் செய்தல் என்பதாகும். இது முழுக்க முழுக்க ஒரு தவறான விசயம். அடுத்தவரின் கவிதையை திருடி தன் பெயரைப் போட்டுக் கொள்வதனால் இது உரிமைப் பிரச்சனையாகி விடுகிறது. இதனை வரவேற்பதோ, ஊக்கப்படுத்துவதோ தவறு. சம்பந்தபட்ட கவிஞர் அவ்வாறு நடப்பதை தவிர்ப்பதே நல்லது. அடுத்தவர் கவிதைக்கு நம் பெயரை போடுவதனால் நாம் பெரிய ஆளாகி விட முடியாது. அது மட்டுமல்ல கவிதை உலகில் தொடர்ந்து இரவல் குதிரையில் பயணிப்பது இயலாத ஒன்றே.
இங்கு கவனியுங்கள்…
விதவை பூவும் வைக்கிறாள்
பொட்டும் வைக்கிறாள்
கணவன் படத்துக்கு.
மேற்படி இந்த கவிதை 2015 லிருந்து 2018 வரை பலரால் பல பெயர்களில் உரிமை கொண்டாடப் பட்டுள்ளது. அதே சொற்கள்.. அதே வரிகள்.. அதே அடிகளில்.
இது அப்பட்டமான திருட்டு..யார் முதலில் திருடியது..? இதை வரவேற்பது தவறு.இது கண்டனத்திற்குரியது.
இன்று தான் இவ்வாறெல்லாம் நடக்கிறது என எண்ணிவிட வேண்டாம்.
ஜப்பானில் மட்சுவோ பாஷோ காலத்திலேயே இது போல நடந்திருப்பதை அவரது கவிதை வாயிலாகவே அறியலாம்.
Don’t imitate me,
It’s as boring
As the two halves of melon.
- Matsuo_Basho ( 1644 – 1694 )
என் போல் செய்யாதே
அதில் சுவாரஸ்யமில்லை
முலாம் பழப் பாதிகளைப் போல.
- மட்சுவோ_பாஷோ
ஆக… இது ஒன்றும் புதிதல்ல. பதினாறாம் நூற்றாண்டிலேயே துவங்கி விட்ட ஒன்று…
கவிஞர்களின் செயலில் தான் உள்ளது..
சாயலும்..போலச் செய்தலும்..