தொடர் 27

ஹைக்கூ ஒரு அழகிய ஓவியம். அதை நீங்கள் ரசிக்கத் துவங்கும் போது பல பரிமாணங்களில் அது உங்களை பரவசப்படுத்தும்.

ஹைக்கூ கவிதைகளை நாம் கவியரங்குகளிலோ… வாசகர் இடத்திலோ வாசிக்கும் போது சில நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

ஹைக்கூ மூன்றடியால் எழுதப்படுவதும், ஈற்றடி கவிதையின் போக்கினை மாற்றும் வல்லமையுடன் இருப்பதையும், திருப்பம் தருமாறு எழுதப்படுவதையும் அனைவரும் அறிவோம். எனவே நாம் அதனை வாசிக்கும் போது இப்படியாகத்தான் வாசிக்கப் பட வேண்டுமென வரையறை செய்துள்ளனர். அதாவது…

கவிதையின் முதலிரண்டு அடிகளை வாசித்து சற்றே நிறுத்த வேண்டும். பின் மறுபடியும் முதலிரண்டு அடிகளை வாசித்த பின் திருப்பம் தரும் அந்த மூன்றாவது அடியை வாசிக்க வேண்டும்..

ஏனிந்த நடைமுறை ? ஹைக்கூ எழுதக் கூடிய கவிஞனுக்கு மட்டும் உரித்தானது அல்ல. அது வாசகனையும் தன்னோடு இணைந்து பயணப்பட வைப்பது என்பதனால், முதலிரண்டு அடியை வாசித்து நிறுத்தும் போது… வாசகன் ஈற்றடியை யோசிக்க ஒரு நிமிடம் அவகாசம் தருகிறோம். அதே வேளையில் நாம் ஈற்றடியை இரண்டாவது முறை வாசித்து தொடரும் போது வாசகனின் எண்ண ஓட்டத்துடனோ அல்லது அவனது எதிர்பார்ப்பிற்கு மாறாகவோ அது அமைந்து பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி விடுகிறது..

கீழ்காணும் கவிதையை காணுங்கள்..

மரணம் நிச்சயம்
மருந்தாவது இருக்கக் கூடாதா..

இதையே இருமுறை சொல்லி நிறுத்துகிறான் கவிஞன்..

ஈற்றடி என்னவாக இருக்கும் ? ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு சிந்தனை…

ஈற்றடி மரணத்தை வெல்வதாக இருக்குமோ..?!

அது சாத்தியமில்லை. .மரணம் நிச்சயமே. ஒருவேளை அதை தள்ளிப்போடக் கூடிய வகையில் அமையுமா ஈற்றடி ? இவ்வாறான கற்பனைகள் வாசகனிடத்தில் ஏற்படுவது சகஜமே..

ஆனால்…

மரணம் நிச்சயம்
மருந்தாவது இருக்கக் கூடாதா
இனிப்பாக..!

  • கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன்

என கவிஞர் நிறைவு செய்யும் போது… ஆஹா… மரணம் நிச்சயமே. உடல் நலமின்மைக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளாவது இனிப்பாக இருந்து தொலைக்கக் கூடாதா… அதுவும் ஏன் கசந்து தொலைகிறது என்ற அங்கதம் அங்கே இழையோடி வாசகனை… என்ன ஒரு திருப்பம் என எண்ணத் தோன்றி விடுகிறது. இதுவே ஹைக்கூவை வாசித்து நிறுத்தி வாசகனை சிந்திக்க வைப்பதனால் ஏற்படும் நன்மை.

இன்னும் வரும்… 

 முன்தொடர் 26