தொடர் 23.
சொல்லாமல் விடும் வார்த்தைகள்
ஹைக்கூ கவிதைகளில் கவிஞன் சொல்லவரும் சில விசயங்களை, நேரடியாக கவிதையில் சொல்வதை விட சொல்லாமல் விடுவதும், அதனை வாசகனின் எண்ண ஓட்டத்திற்கு விட்டுவிடுவதும் பெரும்பாலும் சிறப்பாக அமையும்.
கவிதைகளில் அனைத்து விசயத்தையும் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. வாசகரையும் சிந்திக்கத் தூண்டுவதே ஹைக்கூ கவிதையின் சிறப்பும் ஆகும்.
இதை கவனியுங்கள்..
உறைந்த பனி
உருமாறிக் கொண்டிருக்கிறது
உருவங்கள் பலவாக..!
உறைந்த பனி.. உருமாறிக் கொண்டிருக்கிறது என்றவுடன்.. பனியின் அடுத்த நிலையான நீராக உருகத் துவங்குவதை எண்ணத் துவங்குவான் வாசகன். ஆனால் உருவங்கள் பலவாக என்றவுடன்.. பனிச் சிற்பங்கள் என்பதை நேரடியாகச் சொல்லாமல் வாசகனின் சிந்தனைக்கு கவிஞன் விட்டு விடுகிறான். அதே போல இதை கவனியுங்கள்..
அறுவடை முடிந்த வயல்
ஆங்காங்கே பூத்திருக்கிறது
வெள்ளைக் கொக்குகள்..!
அறுவடை முடிந்ததும் வயல் வெளிகளில் கொக்குகளும், நாரைகளும், சின்னஞ்சிறு பூச்சிகளையும், புழுக்களையும் உண்பதற்கு கூடும். ஆனால் அந்த விசயம் இங்கு நேரடியாகச் சொல்லப்பட வில்லை. அதனை வாசகனை ஊகித்தறிய கவிஞன் விட்டு விடுகிறான்.
இந்த கவிதையை கவனியுங்கள்..
கிடைத்த உணவை பங்கிட்டுக் கொண்டனர் தாத்தாவும்..பேத்தியும்..!
சமைத்த உணவல்ல. கிடைத்த உணவினை தாத்தாவும், பேத்தியும் பகிர்ந்து கொள்கிறார்கள் எனில்.. சமைத்து உண்ணும் நிலையில் அவர்கள் இல்லை. பேத்தி சின்னஞ்சிறு சிறுமியாயும் இருக்கலாம். தாத்தாவோ முதுமையின் இயலாமையில் இருக்கலாம். ஏன்.. இருவரும் பிச்சைக்காரர்களாகவும்.. ஏழ்மையிலும், வறுமையிலும் உழல்பவர்களாக கூட இருக்கலாம். இது போன்ற பல கோணங்களை நாம் ஹைக்கூவில் சொல்லுவதில்லை. ஆனால் கவிதை சொல்லியே நகர்கிறது. கவிஞனைப் போல வாசகனையும் சிந்திக்க வைக்கும் ஆற்றல் கொண்டது ஹைக்கூ.