பாடல் – 95
அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவும் – செறுநரின்
வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.
(இ-ள்.) அறிவு அழுங்க – நல்லறிவு கெடும்படி, தின்னும் – வருத்துகின்ற, பசிநோயும் – பசியாகிய நோயும், மாந்தர் – நல்லோர், செறிவு அழுங்க – நெருங்குதல் கெடும்படி, தோன்றும் விழைவும் – உண்டாகும் விருப்பமும்; செறுநரின் – பகைவரிடத்துண்டாகும், வெவ்வுரை – கொடிய மொழிகளை, நோனா – பொறுக்காத, வெகுள்வும் – கோபமும்; இவை மூன்றும் – ஆகிய இந்த மூன்றும், நல்வினை – நல்ல வினையை, நீக்கும் – நீக்குகின்ற, படை – படைக் கருவிகளாம்; (எ-று.)
(க-ரை.) கொடும் பசியாலும், பெருவிருப்பாலும், கொடுமொழி பொறுக்காத கோபத்தாலும் அறமுறை கெடும் என்பது.
செறிவு : தொழிற்பெயர். செறுநர் : வினையாலணையும் பெயர். நோனா – நோன் : பகுதி. வெவ்வுரை : வெம்மை + உரை. பசிநோய் : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை.