பாடல் – 92
விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
யொன்றும் உணராத ஏழையும் – என்றும்
இறந்துரை காமுறு வானுமிம் மூவர்
பிறந்தும் பிறவா தவர்.
(இ-ள்.) விழுத்திணை – (அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய) சிறந்த குலத்தில், தோன்றாதவனும் – பிறவாதவனும்; எழுத்தினை – இலக்கண நூலை, ஒன்றும் உணராத – எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத, ஏழையும் – பேதையும்; என்றும் – எப்பொழுதும்; இறந்து – முறைதப்பி, உரை – சொற்களை, காமுறுவானும் – பேச விரும்புகின்றவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், பிறந்தும் – மக்கட் பிறப்பிற் பிறந்தும், பிறவாதவர் – (பிறப்பின் பயனையடையாமையால்) பிறவாதவராவார்; (எ-று.)
(க-ரை.) நற்குலத்திற் பிறவாதவனும், படிப்பில்லாதவனும் மரியாதை தப்பிப் பேச முயல்கின்றவனும், மனிதர் என்று சொல்லத் தகாதவர் என்பது.
விழுத்திணை – விழுப்பமாகிய திணை : பண்புத்தொகை. எழுத்து – தன்னை யுணர்த்தும் இலக்கண நூலக் காதலால் காரியவாகுபெயர். ஒன்றும் : உம் முற்றுப் பொருளுடன் இழிவு சிறப்புப் பொருளிலும் வந்தது.