பாடல் – 91
பெறுதிக்கண் பொச்சாந் துரைத்தல் உயிரை
இறுதிக்கண் யாமிழந்தோம் என்றல் – மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்
மன்னா உடம்பின் குறி.
(இ-ள்.) உயிரை – (தாய் தந்தைமுதலிய) உயிர்களை, பெறுதிக்கண் – பெற்றவிடத்து, பொச்சாந்து – (பெற்றோர் தமக்குச் செய்த உதவியையும், தாம் அவர்க்குச் செய்ய வேண்டிய உதவியையும்) மறந்து, உரைத்தல் – இகழ்ந்து சொல்லுதலும்; இறுதிக்கண் – அவர் தம் காலமுடிவில், நாம் இழந்தோம் – நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம், என்றல் – என்று இரங்குதலும்; மறு – நோய், வந்து – வந்ததினால், தன் உடம்பு – தன்னுடைய உடல், கன்றுங்கால் – மெலியுங் காலத்தில், நாணுதல் – (முன் அறஞ்செய்திலோமே யென்று தனக்குள்ளே) நாணப்படுதலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், மன்னா – நிலைபெறுதலில்லாத, உடம்பின் குறி – உடம்பை யுடையானிடத்துத் தோன்றும் அடையாளங்களாம்; (எ-று.)
(க-ரை.) தாய் தந்தையர் இருக்கும்போது அவரை இகழ்ந்து நடப்பதும், அவர்கள் இறந்தபோது வீணாய்த் துன்பப்படுவதும் துன்பம் நேர்ந்தபோது அறஞ்செய்யாது போனோமே யென்று நாணுவதும் உடற்பற்று மிக்க மூடர்கள் செய்கை என்பது.
பெறுதி, இறுதி : தி விகுதி பெற்ற தொழிற்பெயர்கள். நடு நின்ற ‘உயிரை’ என்னுஞ் சொல் பெறுதிக்கண் என முன்னும். இறுதிக்கண் எனப் பின்னும் சென்றடைதலால் தாப்பிசைப் பொருள் கோள். செய்யுங் கடமைகளைச் செய்த சிறப்புப்பற்றித் தாய்தந்தை முதலியோரை அறிவுப் பொருளாகிய உயிரென்றும், செய்ந்நன்றியறிதல் முதலிய உயிர்க்குணம் இவனிடத்துத் தோன்றாமையாகிய இழிவுபற்றி இவனை உடம்பு என்றுங் கூறினமையால், அவ்விரண்டும் முறையே அவ்வுயர்வு இழிவுகளைப்பற்றி வந்த திணைவழுவமைதி, பொச்சாந்து : பொச்சா : பகுதி