பாடல் – 87
கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்
ககன்ற இனம் புகுவானும் இருந்து
விழுநிதி குன்றுவிப் பானுமிம் – மூவர்
முழுமக்க ளாகற்பா லார்.
(இ-ள்.) கொல்வது – (ஒருயிரைக்) கொல்வதற்கு, தான் அஞ்சான் – தான் அஞ்சாதவனாகி, வேண்டலும் – அதனைச் செய்ய விரும்புதலும்; கல்விக்கு -; அகன்ற – நீக்கமாகிய, இனம் – கூட்டத்திலே, புகுவானும் – நுழைகின்றவனும்; இருந்து – (ஒரு முயற்சியும்) செய்யாதவனா யிருந்து, விழு நிதி – (முன்னுள்ள) பெருஞ் செல்வத்தை, குன்றுவிப்பானும் – (செலவு செய்து) குறைவிப்பவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், முழுமக்கள் – மூடர்கள், ஆகல்பாலர் – ஆகுதலாகிய தன்மையை யுடையார்; (ஏ-று.)
(க-ரை.) அஞ்சாது ஓருயிரைக் கொலை புரியக் கருதுவதும், படிப்பிற் பற்றற்றவரோடு சேர்வதும், முன்னோர் பொருளைப் பெருக்காமல் செலவழிப்பதும் மூடர் செய்கை என்பதாம்.
கொல்வது : தொழிற்பெயர். அஞ்சான் : முற்றெச்சம். கல்விக்கு : கு உருபு நீக்கப் பொருளில் வந்தது. அறிவின்மையால் மக்கட்டன்மையில் குறைந்தவரை முழுமக்கள் என்றது மங்கல வழக்கு. இதை இலக்கணமுடையதாகக் கொண்டு அறிவு நுழையப் புரையில்லாத மக்கள் எனப் பொருள் கூறுவாருமுண்டு. பாலார் : பண்படியாகப் பிறந்த பெயர்.