பாடல் – 86
அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றந் தரூஉம் பகை.
(இ-ள்.) அன்பு பெருந்தளை – அன்பினாலாகிய பெருந்தளையினது, யாப்பு – கட்டு, நெகிழ்ந்து ஒழிதல் – தன்னை விட்டுத் தளர்ந்து நீங்குதலும்; கற்பு – கல்வியாகிய, பெரும்புணை – பெரிய தெப்பத்தை, காதலின் – பொருள் முதலியவற்றின் விருப்பினால், கை விடுதல் – முற்றும் விட்டுவிடுதலும்; நட்பின் – ஒருவரிடத்தில் வைத்த நட்பினால், நயம் நீர்மை – நீதித் தன்மையினின்று, நீங்கல் – நீங்குதலும், இவை மூன்றும் – ஆகிய இவை மூன்றும், குற்றம் தரூஉம் – (ஒருவனுக்குக்) குற்றங்களை விளைக்கின்ற, பகை – பகைகளாம்; (எ-று.)
(க-ரை.) உயிரிடத்தில் அன்பற்றிருப்பதும், பொருட்பற்றால் கல்வியை விடுதலும்; நட்பினால் ஒருபாற் கோடுதலும் பகைபோற் குற்றந் தருவன என்பது.
அற்புத் தளை : மூன்றும் வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்க தொகை; அன்பாகிய தளையெனின் பண்புத்தொகையாம். தளை : முதனிலைத் தொழிலாகு பெயர். கல்வி, ஒருவனை அறிவு நூல்களை யுணர்ந்து பொருளியலறிந்து பிறவிக் கடலைக் கடந்து வீடுபெறச் செய்வதால், பெரும்புணை யென உருவகிக்கப் பட்டது. குற்றம் – இருமைப் பயனு மிழத்தல் – தரூஉம் : செய்யுளிசைநிறை யளபெடை.